» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாலிபர் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - சிபிஎம் வலியுறுத்தல்!

வியாழன் 23, ஜூலை 2026 8:08:40 PM (IST)

தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் அருணாச்சலம் உயிரிழந்த சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இச்சம்பவம் தொடர்பாகச் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர் அருணாச்சலம் (24) என்பவரை, சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாகக் கூறி தூத்துக்குடி தெற்கு காவல்துறையினர் கடந்த 17.07.2026 அன்று காலையில் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அன்று மாலையே தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் காயங்களுடன் காவல்துறையினரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

உயிரிழந்த அருணாச்சலத்தின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ள அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், அருணாச்சலம் உயிரிழப்பதற்கு முன்பு காவல்துறையினர் தன்னைத் தாக்கியதாகக் கூறும் வாக்குமூலக் காணொலி வெளியாகியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். தாளமுத்துநகர் காவல் நிலையக் காவலர், தெற்கு காவல் உதவி ஆய்வாளர், காவலர் உட்பட நான்கு பேர் தாக்கியதாலேயே அருணாச்சலம் உயிரிழந்துள்ளதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சபரி வர்மன் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் கட்டுப்பாட்டில் அருணாச்சலம் உயிரிழந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 

எனவே, இத்தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினர் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், இவ்வழக்கைச் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுப் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory