» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தீண்டாமை சுவரை அகற்ற கோரி தேர்தல் புறக்கணிப்பு : கிராம மக்கள் அறிவிப்பு!

வெள்ளி 27, மார்ச் 2026 10:19:05 AM (IST)



விளாத்திகுளம் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் கிராமத்தில், இரு தரப்பினரிடையே நிலவும் மோதலால் கட்டப்பட்ட தீண்டாமைச் சுவரை அகற்ற வலியுறுத்தி, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சங்கரலிங்கபுரம் கிராமத்தில் கடந்த 1920-ம் ஆண்டு முதல் ஆதிதிராவிடர் குடியிருப்பு மக்கள் பயன்படுத்தி வந்த பொதுப் பாதையில் ஏற்பட்ட சாதி மோதல் காரணமாக, ஒரு தரப்பினர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி அங்கேயே தேவாலயம் ஒன்றை அமைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, தேவாலயத்தின் அருகே சிறியதாக எழுப்பப்பட்ட சுவர், நாளடைவில் உயரமாகக் கட்டப்பட்டு ‘தீண்டாமைச் சுவராக’ மாறியதாகக் கூறப்படுகிறது. அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தில் இந்தச் சுவர் கட்டப்பட்டுள்ளதாகக் கூறும் அப்பகுதி மக்கள், இதனை அகற்றக் கோரி கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இப்பகுதி மக்கள் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாவைப் புறக்கணித்தல், வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தல், சுடுகாட்டில் குடியேறும் போராட்டம், வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிடுதல் போன்ற பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர்.

இத்தனை போராட்டங்கள் நடத்தியும், அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் இதுவரை எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மக்களின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.

"தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்கு கேட்டு வரும் அரசியல்வாதிகள், எங்களின் அடிப்படைப் பிரச்சனைகளைக் கண்டுகொள்வதில்லை. எங்கள் குழந்தைகளுக்குச் சாதிச் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. ஒரு தரப்பினருக்குப் பாதையை மறித்து எவ்வாறு பட்டா வழங்கப்பட்டது?" என கிராம மக்கள் ஆவேசமாகக் கேள்வி எழுப்புகின்றனர்.

தற்போது, இந்தத் தீண்டாமைச் சுவரை அகற்றி, முறைகேடாக வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக, "சுதந்திர இந்தியாவின் அவமானச் சின்னமான சங்கரலிங்கபுரம் தீண்டாமைச் சுவரை அகற்றாவிட்டால், 2026 சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்" என வீடுகளின் சுவர்களில் போஸ்டர்களை ஒட்டி கிராம மக்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory