» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: ஊழியர்கள் வெளியேற்றம்!

வியாழன் 26, மார்ச் 2026 8:20:33 AM (IST)

தூத்துக்குடியில் தலைமை அஞ்சலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால், ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. 

மதுரை கோட்ட தலைமை அஞ்சலகத்திற்கு நேற்று புதன்கிழமை நண்பகல் 12 மணியளவில், ஒரு மிரட்டல் மின்னஞ்சல் வந்தது. அதில், தூத்துக்குடி காமராஜ் கல்லூரி எதிரே உள்ள தலைமை அஞ்சலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து மதுரை அலுவலகத்திலிருந்து தூத்துக்குடி முதுநிலை அஞ்சலகக் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமாருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்த கண்காணிப்பாளர் செந்தில்குமார் இது குறித்துக் காவல்துறைக்குத் தகவல் அளித்தார். உடனடியாக அஞ்சலகத்தில் இருந்த 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் அஞ்சலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தீவிரச் சோதனை நடத்தப்பட்டது.

சுமார் இரண்டு மணி நேரத் தீவிரச் சோதனைக்குப் பிறகு, அஞ்சலகத்தில் வெடிபொருட்கள் ஏதும் கண்டறியப்படவில்லை. இது வெறும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், இந்தச் சோதனையின் காரணமாக அஞ்சலகப் பணிகள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகப் பாதிக்கப்பட்டன. மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்துப் போலீசார் சைபர் கிரைம் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory