» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அக்னி வீர் வாயு ஆட்சேர்ப்பிற்கான ஆன்லைன் தேர்வு: ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தகவல்
செவ்வாய் 18, ஜூன் 2024 3:16:13 PM (IST)
இந்திய விமானப்படை அக்னி வீர் வாயு ஆட்சேர்ப்பிற்கான ஆன்லைன் தேர்வுக்கு ஜூலை 8 முதல் 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்திய விமானப்படையில் ஆட்சேர்ப்பிற்கான அக்னிவீர் வாயு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் தேர்வுக்கு 16 முதல் 20 வயது வரையுள்ள திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 03.07.2004 முதல் 03.01.2008 வரை தேதிகளுக்குள் பிறந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதியாக 12 ஆம் வகுப்பில் இயற்பியல், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் டெக்னாலஜி, இன்/பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய பாடப்பிரிவுகளில் மூன்று வருட டிப்ளோமா பொறியியல் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
அல்லது இரண்டு வருட VOCATIONAL COURSE கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த ஆன்லைன் தேர்வுக்கு 08.07.2024 முதல் 28.07.2024 வரை விண்ணப்பிக்கலாம். இந்த ஆட்சேர்ப்புக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு 18.10.2024 முதல் நடைபெற உள்ளது.
தேர்வுக் கட்டணம் ரூ.550/- ஆகும். இத்தேர்வு குறித்த கூடுதல் தகவல்களை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் அறியலாம். இந்திய விமானப்படையில் இணைந்து பணியாற்ற விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, கேட்டுக்கொண்டுள்ளார்கள்.