» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை துவங்கியது: 1,500 போலீசார் பாதுகாப்பு!
செவ்வாய் 4, ஜூன் 2024 8:22:09 AM (IST)
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை வஉசி பொறியியல் கல்லூரியில் இன்று காலை தொடங்கியது. காலை 9 மணி முதலே முன்னணி நிலவரங்கள் ஒவ்வொரு சுற்று முடிந்தவுடன் வெளியிடப்படும்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகளை எண்ணும் பணியும், அதன் பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி, அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் எஸ்டிஆர் விஜயசீலன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரௌனா ரூத் ஜெனி உள்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த தொகுதியில் 14,58,430 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 4,72,056 ஆண் வாக்காளர்களும், 5,03,325 பெண் வாக்காளர்களும், 87 திருநங்கைகளும் வாக்களித்து உள்ளனர். இன்று காலை வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. முன்னதாக வேட்பாளரின் வாக்கு முகவர்கள் தொகுதி வாரியாக கடும் சோதனைக்கு பின்னர் வாக்கு என்னும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியமான லட்சுமிபதி மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் பார்வையிட்டனர்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கூறும்போது தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை ஒவ்வொரு சுற்றுக்கள் முடிவடைந்ததும் தேர்தல் அதிகாரி சரி பார்த்து கையொப்பம் இட்ட பின்பு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
வாக்கு எண்ணும் மையமான வஉசி பொறியியல் கல்லூரியைச் சுற்றிலும், மாவட்டத்தில் உள்ள முக்கிய சந்திப்பு பகுதிகள், மக்கள் கூடும் இடங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன் தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனனர்.