» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முள்ளக்காடு பகுதியில் போதை ஆசாமிகள் அட்டகாசம் : காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

புதன் 15, மே 2024 4:06:45 PM (IST)

தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் போதை ஆசாமிகள் அட்டகாசம் அதிகரித்து வருவதால் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், "தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் உப்பளம், விவசாயம், தொழிற்சாலைகள் மிகுந்த பகுதியாகும். இங்கு ஏராளமான வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தைச் சார்ந்தவர்கள் தொழிலாளர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களை மையப்படுத்தி கஞ்சா வியாபாரிகள் இந்தப் பகுதியில் குவிந்து வருகிறார்களாம்.

முள்ளக்காடு ஊரில் ஆள்நடமாட்டம் குறைவான பகுதிகள், லாரி நிறுத்தங்கள், இரவு நேர டீ கடைகள் அதிகம் காணப்படுவதால் கஞ்சா வியாபாரிகளுக்கும், கஞ்சா பிரியர்களுக்கும் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், கஞ்சா விநியோகம் கனஜோராக நடைபெற்று, பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடைபெற உறுதுணையாக இருந்து வருகிறது.

குறிப்பாக, சாண்டி கல்லூரி செல்லும் பிரதான சாலை முழுவதும் கஞ்சா வியாபாரமும், அதே சமயத்தில் அந்த பகுதியில் செல்லும் பொதுமக்களை கஞ்சா போதையில் இளைஞர்கள் வழிமறித்து வழிபறி செய்யும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தப் பகுதியில் துணிகரமாக கஞ்சா விற்பனை கொடிகட்டி பறக்கிறது. இச்சாலையில் மின்விளக்குகள் சரிவர எரியாமல் இருள் அடைந்து காணப்படுகிறது. அருகில் குடியிருப்புகள் ஏதும் இல்லாத காரணத்தினால் மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் இந்த பகுதியில் சங்கமிக்கிறார்கள்.

மேலும், சாண்டி கல்லூரி சாலை மற்றும் பொட்டல் காட்டிற்கு செல்லும் சாலைகளில் நடைபெறும் தொடர் வழிபறிச் சம்பவங்கள், கொலைகள், கஞ்சா விற்பனை, கள்ளச்சாராய விற்பனை போன்றவற்றால் இரவு நேரங்களில் பொதுமக்கள் இவ்வழியே பயணிக்கவே மிகுந்த அச்சப்படுவதாகவும், இரவு நேர பயணத்தை தவிர்த்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர் பொதுமக்கள்.

சமீபத்தில் நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. முள்ளக்காடு, ஆதிரா டீ கடை அருகில் 13.05.2024 அன்று காலை 1.15 மணியளவில் குலையன்கரிசலை சார்ந்த சுபாஷ் என்பவர் சாண்டி பாலிடெக்னிக் கல்லூரி சாலை வழியாக சென்றுள்ளார். அவரை 3 பேர் கொண்ட கும்பல் பைக்கில் வழி மறித்து, அரிவாள், கத்தி மற்றும் கொடூர ஆயுதங்களை காட்டி அவரிடமுள்ள 3 பவுன் தங்க மோதிரத்தை பறிக்க முயற்சித்துள்ளனர். 

அதை அவர் தடுத்ததால் அவரை அரிவாளை கொண்டு வெட்ட துணிந்துள்ளனர். சுதாரித்துக் கொண்ட சுபாஷ், அரிவாளை கையை கொண்டு தடுத்துள்ளார். இதனால் சுபாஷ்-க்கு கையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அந்த தங்க மோதிரம் கழட்ட முடியாமல் போனதால், அவரிடமுள்ள செல்போன், ஏடிஎம் கார்டு, பைக் லைசன்ஸ், ஆர்சி புக், ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர். உயிர் தப்பித்த அவர், முத்தையாபுரம் காவல்நிலையத்தில் 14.05.2024 அன்று நேரில் புகார் மனு வழங்கியுள்ளார். (மனு எண்: 386ஃ2024). 

மேற்கண்ட சம்பவம் போன்று பல குற்றசம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறினாலும், இதுகுறித்து, காவல்துறையிடம் புகார் தெரிவித்தால், தங்களுக்கு ஏதேனும் ஆபத்து நேரிடுமோ என ஒருவித அச்சத்தில் பொதுமக்கள் யாரும் புகார் தெரிவிக்காமல், நமக்கு எதுக்கு வீண் வம்பு என்று இருந்து வருகின்றனராம். காரணம் இதே வழியில் மீண்டும் நாம் செல்லும்போது இந்த கும்பல்கள் மூலம் ஆபத்து ஏற்படலாம் என பலரும் அஞ்சுகின்றனர். போலீசார் அவ்வப்போது நடவடிக்கை எடுத்தாலும், முழுமையாக கஞ்சா விற்பனையை தடுக்க முடியவில்லை.

பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து நடக்கும் இந்த கஞ்சா விநியோகத்தை தடுத்து, இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் கஞ்சா நடமாட்டத்தை வேரோடு களைய மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் வைத்து வருகின்றனர். சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும், எஸ்.பி. பாலாஜி சரவணன் எடுத்த அதிரடி நடவடிக்கையால் கஞ்சா வியாபாரிகளும், வழிப்பறி கும்பல்களும் கலக்கத்தில் இருந்து வரும் நேரத்தில், முள்ளக்காடு பகுதியில் மட்டும் சமூக விரோத சம்பவங்கள் தடையின்றி நடப்பது ஆச்சரியம் தெரிவிக்கின்றனர் அப்பகுதியினர். 

முத்தையாபுரம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டால் மட்டுமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்கின்றனர். மேலும் இந்த பகுதிகளில் சமூக விரோதிகளை கண்டு பிடிக்க மாறுவேடத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டால் இந்த கும்பலின் அடாவடி செயல்களை தடுக்க முடியும் என பொதுமக்கள் காவல் துறைக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும், சாண்டி பாலிடெக்னிக் கல்லூரி, கிரேஸ் பொறியியல் கல்லூரி இருப்பதால், மாணவர்கள் அதிகளவில் நடந்தே முள்ளக்காடு பேருந்து நிறுத்தத்திற்கு செல்வது வழக்கம். கல்லூரி சாலைகளில் கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

m.sundaramமே 17, 2024 - 07:51:45 PM | Posted IP 172.7*****

It is Dravida Modal. Neither it can be challenged nor it can be changed because police cannot act as per police act idepentently.

Srinivasanமே 16, 2024 - 07:26:43 AM | Posted IP 162.1*****

In tamil nadu dmk govt failed to maintain the law and order. But always ADMK govt have good law and order

RAJAமே 15, 2024 - 04:50:05 PM | Posted IP 162.1*****

INTHA NILAMAI THAN THIRUCHENDUR ROUND ANA MUTHAL STERLIGHT VARAI 10 MANI MUTHAL VIDYUM VARAIKKUM INTHA MATHIRI VALIPPARI NADANTHU KONDU IRUKKUTHU VELAI PARPPATHARKKU ACHAMAGA IRUKKINDRATHU ITHARKU KAVALTHURAI MIGA SIRAPPAGA NADAVADIKKAI L IRANKINAL MIGAVUM HELP AGA VALVATHARATHAI MEMPADUTHUVATHARKU UTHAVIYAGA IRUKKUM

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory