» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் குடிநீர் கோரி பொதுமக்கள் மறியல் : போக்குவரத்து பாதிப்பு!
புதன் 8, மே 2024 9:03:13 AM (IST)
தூத்துக்குடி இனிகோ நகரில் ஒரு மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தியதியதால் கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி கடற்கரை சாலை பகுதியில் அமைந்துள்ளது இனிகோ நகர் மீனவர்கள் வசிக்கும் பகுதியாகும் இங்கு 500-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இந்த பகுதிக்கு புதிதாக குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டதில் இருந்து முறையாக மாநகராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக லாரிகள் மூலம் தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் குடிநீரை 750 ரூபாய்க்கு விலை கொடுத்து இந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இதை தொடர்ந்து கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தண்ணீர் தேவை அதிகரிக்க காரணத்தினாலும் விலை கொடுத்து வாங்க முடியாத சூழ்நிலையாலும் இன்று குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து பாதிக்கப்பட்ட மீனவ மக்கள் தூத்துக்குடி கடற்கரைச் சாலை பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
இதை அடுத்து அந்த பகுதிக்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.