» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் வினாடி-வினா போட்டி, மீன்வளத் திருவிழா!
புதன் 24, ஏப்ரல் 2024 5:37:11 PM (IST)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் "வினாடி-வினா போட்டி” மற்றும் "மீன்வளத் திருவிழா” நடைபெற்றது.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாணவர் இலக்கிய சங்கம் சார்பில் "வினாடி வினா போட்டி” மற்றும் "மீன்வளத் திருவிழா” நடைபெற்றது. இக்கல்லூரியில் இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் கடந்த 30 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த எட்டு கல்லூரியின் மாணவர்கள் இந்த வினாடி-வினா போட்டியில் கலந்து கொண்டனர்.
வினாடி-வினா போட்டியின் முதற்கட்ட சுற்றின் முடிவில் 5 கல்லூரிகள் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றன. காமராஜ் கல்லூரி, உதவிப் பேராசிரியர் வேல்குமார் வினாடி-வினா போட்டியை நடத்தினார். பத்து கடினமான சுற்றுகளை கொண்ட இறுதிப்போட்டியில் டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தலைஞாயிறு முதல் பரிசை பெற்று அதற்கான கேடயத்தையும் பணப்பரிசு ரூ.3000யையும் தட்டிச் சென்றனர்.
இதில் இரண்டாம் பரிசை டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பொன்னேரி பணப்பரிசு ரூ.2000யையும், மூன்றாம் பரிசை மீன்வள உயிரித்தொழில்நுட்ப நிலையம், சென்னை பணப்பரிசாக ரூ.1000யையும் தட்டிச்சென்றனர்.
மீன்வளத் திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 10 கல்லூரிகளைச் சார்ந்த சுமார் 300 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இதில் 17 வகையான கலைப் போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டியில் முதலிடம் பிடித்த வ.உ.சிதம்பரனார் கல்லூரி, தூத்துக்குடி சுழற்கோப்பையை வென்று ரொக்கப் பரிசாக ரூ.5000 வென்றனர். மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில்நுட்ப கல்லூரி, சென்னை, இரண்டாவது பரிசிற்கான கேடயத்தையும் மற்றும் ரொக்கப் பரிசு ரூ.3000 வென்றனர். டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பொன்னேரி மூன்றாம் பரிசிற்கான கேடயத்தையும் ரொக்கப் பரிசு ரூ.1000 வென்றனர்.
தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியல் கல்லூரி முதல்வர் ஏ. ஜாய்ஸ்லின் சர்மிளா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயத்தையும் பரிசையும் வழங்கி பாராட்டினார். எமீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் (பொ) ம். காசிநாதபாண்டியன், மீன்வளத்திருவிழா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயத்தையும் பரிசையும் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சிகளுக்கு கல்லூரியின் முதல்வர் ப. அகிலன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிகளை மாணவர் சங்கம் துணைத்தலைவர் ந.ஜெயக்குமார் ஒருங்கிணைத்தார்.