» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிவன் கோவில் தேரோட்டம்: வேகத் தடைகளை அகற்ற இந்து முன்னணி கோரிக்கை!
புதன் 17, ஏப்ரல் 2024 3:48:28 PM (IST)
தூத்துக்குடி சிவன் கோவில் ரத வீதிகளில் வேகத்தடையை அகற்ற வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணி மாநகர் மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார் மாநகராட்சி ஆணையருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுரை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா கடந்த 14.4.2024 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி சித்திரை திருவிழா 10 நாட்கள் வெகு விமர்சியாக நடைபெறுகிறது. பத்தாம் நாளன்று 23ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை தேரோட்டம் நடைபெற உள்ளது.
தேர் சுற்றி வரும் ரத வீதியில் தற்போது இரண்டு வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. சித்திர திருவிழா அன்று தேரை பொதுமக்கள் தான் அனைவரும் ஒன்று கூடி தேர் இழுத்து நிலைக்குக் கொண்டு வருவார்கள். மேற்படி வேகத்தடை அமைந்துள்ளதால் தேர் இழுப்பதில் சிரமமும், வேகத்தடையில் ஏறி இறங்கும்போது உயரமான தேர்களில் நடுக்கமும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பக்தர்களின் நலன் கருதி இரண்டு வேகத்தடையை உடனடியாக நீக்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.