» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மருதூர் அணையில் குலசேரக மன்னன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!!

வியாழன் 22, பிப்ரவரி 2024 4:07:36 PM (IST)



மருதூர் அணையில் குலசேரக மன்னன் காலத்து கல்வெட்டை மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைகழக மாணவர் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.

தாமிரபரணி ஆற்றில் மிக முக்கியமான தடுப்பு அணைக்கட்டு மருதூர் அணைக்கட்டாகும். இந்த அணைக்கட்டு கி.பி.1500 ஆம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை குறிப்பில் உள்ளது. இந்த அணைக்கட்டில் ஒரு சில கல்வெட்டுகள் தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது. அவை அணையில் ஏற்பட்ட உடைப்புப் பற்றியும் சிறுசிறு பழுது நீக்கிவேலைகள் மேற்கொண்டமை பற்றியும் குறிப்புகளைத் தருகின்றன. 

இந்த அணையில் ஆங்கிலக் கல்வெட்டும் உள்ளது. அது அணை உடைப்பு குறித்த செய்தியையும் அது அடைக்கப்பட்ட செய்தியையும் தருகிறது. இதற்கிடையில் 4000 அடி நீளம் கொண்ட இந்த அணையில் அடியை குறிக்கும் கல்வெட்டுகள் 100 அடிக்கு ஒரு முறை பதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொல்லியல் துறையைச் சார்ந்த 24 மாணவ மாணவிகள் மருதூர் அணைக்கட்டில் கள ஆய்வுக்காக பேராசிரியர்களான மதிவாணன் மற்றும் முருகன் ஆகியோர் அழைத்துச் சென்றனர். இவர்களுடன் தொல்லியல் துறைத் தலைவர் (பொறுப்பு) பேராசிரியர் சுதாகர் மற்றும் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசும் சென்றிருந்தனர்.

மாணவ மாணவிகள் எழில் கொஞ்சும் மருதூர் அணைக்கட்டை ஆய்வு செய்தனர். அப்போது அணையின் மேல் பகுதியில் உள்ள மருதவள்ளி, சோழ வள்ளி கோயில் அருகே அணைக்கட்டு அருகே குவிந்து கிடந்த கற்களை மாணவர்கள் ஆய்வு செய்தனர். அந்த சமயத்தில் தொல்லியல் முதலாமாண்டு மாணவன் ராகுல் கிருஷ்ணா என்ற மாணவர் ஒரு கல்வெட்டைக் கண்டுபிடித்தார். அதை கண்ட மாணவர்களும் பேராசிரியர்களும், அந்த கல்வெட்டுகளை உடனே படித்தனர். 

அப்போது அந்த கல்வெட்டில் 716 ஆண்டுகளுக்கு முன் மாமன்னன் குலசேகரப் பாண்டியனின் 13வது ஆட்சியாண்டில் (கி.பி 1190-&1216) வெட்டப்பட்டது என்பது தெரிய வந்தது. இக்கல்வெட்டு மன்னன் குலசேகரப் பாண்டியன் ஒரு மண்டபத்தை நிறுவியதைக் கூறுகிறது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இங்கு கோயிலில் காணப்படும் கட்டடக்கலை உறுப்புகள் மற்றும் வேலைப்பாடு நிறைந்த கல்தூண்கள் அதிகமாக காணமுடிகிறது. அப்பகுதி முழுவதையும் கள ஆய்வு செய்தபோது அப்பகுதியில் தொன்மையான கோயில் ஒன்று இருந்திருக்கலாம் எனவும் இதே மாதிரியான கற்களைக் கொண்டுதான் இந்த அணையின் பெரும்பாலான பகுதிகள் கட்டப்பட்டுள்ளது எனவும் பேராசிரியர்கள் தெரிவித்தனர். இந்த கல்வெட்டு ஒரு செவ்வக வடிவிலான கிரனைட் கல்லில்தான் இருந்தது. இந்த கல்லின் எடை சுமார் 200 கிலோ இருக்கும். இது துண்டுத் தூண் வகை கல்வெட்டைச் சார்ந்தது.

இத்துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் மனோண்மணியம் சுந்தரானார் பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் சந்திரசேகர் அவர்களைச் சந்தித்து இந்தக் கண்டுபிடிப்ப- குறித்து விளக்கினார்கள். துணை வேந்தர் இந்த கல்வெட்டை கண்டு பிடித்த ராகுல் கிருஷ்ணாவை பாராட்டினார். பல்கலைகழக மாணவர்கள் கண்டு பிடித்த இந்த கல்வெட்டு மருதூர் அணை வரலாற்றில் ஒரு மைல் கல்லாக விளங்கி வருகிறது. இதேபோல் பல கல்வெட்டுகள் அணை அருகில் குவிந்து கிடக்கும் கல்குவியலில் இருக்கலாம் என ஆர்வலர்கள் கருதுகிறார்கள். 

எனவே அணைக்கட்டில் உள்ள கல்குவியல்களை தொடர்ந்து ஆய்வு செய்து மேலும் கல்வெட்டுகள் இருக்கிறதா? அந்த கல்வெட்டுக்கும் அணைக்கும் என்ன சம்பந்தம். அல்லது இந்த பகுதியில் அழிந்த நிலையில் இருந்த கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட கற்களால் இந்த அணைக்கட்டப்பட்டதா? என்பது உள்பட பல தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ளும் போது இந்த பகுதியை பற்றி பல உண்மையான தகவல்கள் வெளியே வர காரணமாக அமையும். இந்த கல்வெட்டை கண்டு பிடித்து மாணவர் ராகுல் கிருஷ்ணா, மற்றும் சக மாணவர்கள், தொல்லியல் துறை தலைவர் மற்றும் பேராசிரியர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.


மக்கள் கருத்து

MakkalFeb 23, 2024 - 04:25:13 PM | Posted IP 172.7*****

Hats off to Rahul Krishna & the team members

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory