» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் மாசித்திருவிழா சிறப்பாக நடைபெற வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்!

திங்கள் 12, பிப்ரவரி 2024 7:54:00 PM (IST)



திருச்செந்தூர் மாசித்திருவிழா சிறப்பாக நடைபெறுவதற்கு அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்தார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மாசித்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் 14-02-2024 முதல் 25-02-2024 வரை நடைபெறவுள்ள மாசித்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களின் ஆலோசனை கூட்டம் இன்று (12.02.2024) நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்ததாவது: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மாசித்திருவிழாவில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் திருக்கோயிலுக்கு தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைத்திட குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும். திருச்செந்தூர் நகர் முழுவதும் சுகாதார முறையில் குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். 

பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் உபயோகத்திற்கு நகரிலுள்ள ஆவுடையார் குளத்திற்கு தண்ணீர் திறந்துவிட தாமிரபரணி கோட்டம் பொதுப்பணித்துறை பொறியாளர் மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும். திருக்கோயில் வளாகம், குரும்பூர் - குரங்கன்தட்டு நீரேற்று நிலையம், திருச்செந்தூர் தெப்பக்குளம்; நீரேற்றும் நிலையங்களுக்கு மின் விநியோகம் தங்கு தடையின்றி கிடைத்திட தமிழ்நாடு மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேரோட்டம் அன்று தேரோடும் பாதையில் மின் விநியோகத்தை தை துண்டிப்பு செய்து மின் பணியாளர்கள் தேருடன் வலம் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுகாதாரத்துறையினர் திருவிழா காலங்களில் தொற்று வியாதிகள் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். திருச்செந்தூர் நகர் பகுதியில் சேரும் குப்பை கூளங்களை அவ்வப்போது அகற்றிட திருச்செந்தூர் நகராட்சி மூலம் யினரை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈக்கள் மற்றும் கொசுக்கள் தொல்லை இல்லாமல் இருக்க திருச்செந்தூர் நகர் பகுதி மற்றும் திருக்கோயில் வளாகங்களில் கொசு மருந்து தெளிக்க திருச்செந்தூர் பொது சுகாதார துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருக்கோயில் வளாகத்தில் திருவிழா காலங்கள் முழுவதும் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வசதியுடன், அவசர மருத்துவ சிகிச்சை பெறும் வசதியுடனும் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்திட வேண்டும். 

அரசு போக்குவரத்துத்துறை மூலம் பல்வேறு வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவிழா காலங்கள் முழுவதும் தொலைபேசி இணைப்புகள் தங்கு தடையின்றி இயங்கிட தொலைபேசி துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன்வளத்துறையின் நீச்சல், கடலாள், முத்துகுழி பணியாளர்களுடன் சேர்ந்து தீயணைப்புதுறையினர் கடலில் உயிர்மீட்பு பாதுகாப்பு வளையத்துடன், பாதுகாப்புடன் பணிபுரிய வேண்டும்.

திருவிழாக்காலங்களில் தீயணைப்பு வஊர்தி முழுமையாக தண்ணீர் நிரப்பப்பட்டும், மருத்துவ ஊர்தியுடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். திருவிழா காலங்கள் முழுவதும் திருக்கோயில் வளாகம் மற்றும் திருக்கோயிலுக்கு உள்ளும் பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கிட காவல்துறையினர் திருக்கோயில் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும். 20-02-2024 அன்று சிகப்பு சாத்தி மற்றும் 21-02-2024 அன்று பச்சை சாத்தி சுவாமி சப்பரத்திற்கும், பக்தர்களுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திட வேண்டும். தேரோடும் வீதிகளில் உள்ள தற்காலிக கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றிட போதிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.

23-02-2024-ல் தேரோட்டம் அன்று தேருக்கு முன்பும், பின்பும் சுமார் 20 அடி இடைவெளி இருக்குமாறு பாதுகாப்பு வளையங்கள் அமைத்து தேரோட்டம் சிறப்பாக நடைபெற உரிய உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திட வேண்டும். திருவிழா காலங்கள் முழுவதும் உள்மாட வீதிகள், ரத வீதிகள், தெப்பகுளத்தெரு மற்றும் திருநெல்வேலி ரோடு ஆகிய இடங்களில் சுவாமி சப்பரங்கள் செல்வதற்கும், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கும் இடையூறு ஏற்படா வண்ணம் திருச்செந்தூர் நகர் பகுதிக்குள் வரும் போக்குவரத்து வாகனங்களை மாற்று வழிதடங்களில் செல்வதற்கு உரிய ஏற்பாடுகள் செய்திட போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

மாசித்திருவிழா சிறப்பாக நடைபெறுவதற்கு அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய்சீனிவாசன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory