» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் புகுந்த மிளா: மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது!
ஞாயிறு 10, டிசம்பர் 2023 10:43:37 AM (IST)
திருச்செந்தூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் புகுந்த மிளா மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் டி.பி.ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் அலுவலக வளாகத்துக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1½ வயது மதிக்கத்தக்க மிளா ஒன்று புகுந்தது. இதனை நேற்று காலை பணிக்கு வந்த பணியாளர்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் தலைமையில் திருச்செந்தூர் கோட்ட வனச்சரக அலுவலர் கனிமொழி, நெல்லை மண்டல வன கால்நடை மருத்துவ அலுவலர் மனோகரன், கால்நடை ஆய்வாளர் அர்னால்டு, உதவியாளர் ஜிந்தா, திருச்செந்தூர் கால்நடை டாக்டர் பொன்ராஜ் உள்ளிட்டோர் மீட்பு வாகனத்துடன் அங்கு விரைந்து சென்றனர்.
மிளா தப்பியோடாமல் இருக்க வளாகத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பின்னர் துப்பாக்கி மூலம் மயக்க மருந்து செலுத்தப்பட்டு மிளாவை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது மிளா அங்குள்ள மர புதருக்குள் மறைந்து நின்றது. வனத்துறையினர் பின்தொடர்ந்து பதுங்கிச்சென்று அதன்மீது மயக்க ஊசி செலுத்தினர். சிறிது நேரத்தில் மிளா மயங்கியது.
அதன்பிறகு மிளாவினை பரிசோதித்து அதன் கண்களை துணியால் கட்டியும், வலையில் வைத்து லோடு ஆட்டோ மூலம் வல்லநாடு வனச்சரகத்துக்கு உட்பட்ட மலைப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் கூறியதாவது: உடன்குடி அனல் மின்நிலையத்திற்கு பின்புறமுள்ள உடைங்காட்டு பகுதியில் இருந்து தப்பியோடி திசை தெரியாமல் கடற்கரையோரமாக மிளா இங்கு வந்திருக்கலாம்.
சுமார் 4 அடி உயரம் உள்ள இந்த ஆண் மிளா தாவரவியல் வகையை சேர்ந்தது. மனிதர்கள் கூட்டமாக நெருங்கினால் அச்சம் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளதால் மிகவும் கவனமாக மயக்க ஊசி செலுத்தி பிடித்தோம் என கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










