» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் : ஆட்சியர் ஆய்வு!

வெள்ளி 24, நவம்பர் 2023 5:15:38 PM (IST)

தூத்துக்குடி தனியார் பொறியியல் கல்லூரியில் இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது

தூத்துக்குடி முள்ளக்காடு கிராமத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி தலைமையில் இன்று (24.11.2023 ) நடைபெற்றது.

இம்முகாமில், மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்ததாவது: இந்திய தேர்தல் ஆணையம், அனைவரும் ஜனநாயக கடமையாற்றும் வகையில், வாக்காளர் பட்டியல் தயார் செய்து, பாராளுமன்றம் மற்றும் சட்டசபைக்கு தேர்தல்களை நடத்தி வருகின்றது. வாக்காளர் பட்டியலில் இடம் பெற 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும். 

இந்த அடிப்படை தகுதிகளைப் பெற்றிருந்தால், அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக, சிறப்பு சுருக்க முறை திருத்தங்களை இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.2024-ம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கமுறைதிருத்தம், 27.10.2023 முதல் 9.12.2023 வரை நடைபெற்று வருகிறது. 

இந்த சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தில், வாக்காளர் பட்டியலில் சேருவதற்காக, 01.01.2024 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் (01.01.2006-க்கு முன்னர் பிறந்தவர்கள்) தங்களது பாஸ்போர்;ட் சைஸ் புகைப்படம், ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை, 10/12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அல்லது பிறப்பு சான்றிதழ் நகலுடன் தங்களது வீட்டுக்கு அருகில் உள்ள வாக்குச்சாவடிகளில், வாக்காளர் சேர்க்கைக்கான விண்ணப்பம் படிவம்-6ஐ, பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலில் சேர விண்ணப்பிக்கலாம். 

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் /முகவரி திருத்தம்/ நகல் வாக்காளர் அட்டை கோரியும் படிவம்-8-ல் விண்ணப்பிக்கலாம். இதற்காக தேர்தல் ஆணையம் சிறப்பு முகாம்களை வரும் 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மேலும், இணையதளம் மூலம் விண்ணப்பிக்க Voters.eci.gov.in அல்லது Voters Helpline செயலி மூலமும் விண்ணப்பிக்கலாம். 

வாக்காளர் அடையாள அட்டை பெறவதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின், கட்டணமில்லா தொலைபேசி எண் 1950 மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ந்தவர்களுக்கு, ஐனவரி 2024, 5ம் தேதி அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, இந்திய தேர்தல் ஆணையம் முதன் முதலில் உருவான ஐனவரி 25 ம்தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்பட்டு, அன்றைய தினம் முதல் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.

இளம் வாக்காளர்களான 18-19 வயது நிறைவடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் சேர்ந்து, ஊழலற்ற நேர்மையான மக்களாட்சியினை உருவாக்கிட சபதம் ஏற்போம். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இம்முகாமில் இளம் வாக்காளர்களாகிய மாணவ, மாணவியர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து இளம் வாக்காளர்களான 18-19 வயது நிறைவடைந்த அனைவரையும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் விதமாக இளம் வாக்காளர்களுக்கு வாக்காளர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் 6-ஐ மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி வழங்கினார்கள். இம்முகாமில் வட்டாட்சியர்கள் பிரபாகரன் (தூத்துக்குடி), சுரேஷ் (ஓட்டப்பிடாரம்), கல்லூரி முதல்வர் மற்றும் மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory