» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அளவுக்கதிகமான வேதிப்பொருள் கலப்பு: தென் கொரிய நூடுல்சுக்கு டென்மார்க் தடை!
வியாழன் 13, ஜூன் 2024 12:35:45 PM (IST)
அளவுக்கதிகமான காப்சைசின் என்னும் வேதிப்பொருள் கலக்கப்பட்டுள்ள தென் கொரியா நூடுல்சுக்கு டென்மார்க்கில் தடை விதிக்கப்பபட்டுள்ளது.
தென் கொரியாவை சேர்ந்த பிரபல நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஒன்று உலகின் அதிக காரம் சுவை கொண்ட நூடுல்சை தயாரித்து விற்று வருகிறது. உலகம் முழுவதும் இந்த நூடுல்ஸ் ஏற்றுமதி செய்யப்படுகிறது. காரம் மற்றும் சுவை காரணமாக இந்த நூடுல்சுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பரவி கிடக்கிறார்கள்.
இந்தநிலையில் ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் இந்த நூடுல்சுக்கு தடை விதித்துள்ளது. டென்மார்க்கின் உணவு கட்டுப்பாடு அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி அந்த நூடுல்சில் அளவுக்கதிகமான காப்சைசின் என்னும் வேதிப்பொருள் உள்ளதாக கூறியுள்ளது.
காப்சைசின் என்பது மிளகாய், மிளகு உள்ளிட்டவற்றில் காரத் தன்மைக்கு வித்திடும் இயற்கையான கூட்டு வேதியியல் கலவையாகும். இதனால் பொதுமக்கள் தங்களிடம் உள்ள இந்த நூடுல்ஸ் பாக்கெட்டுகளை உடனடியாக கடைகளில் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனம் இதனை திரும்ப பெறுமாறும் கேட்டு கொண்டுள்ளது.