» செய்திகள் - விளையாட்டு » உலகம்
தாய்லாந்தில் ஒரே பாலின திருமணத்திற்கு அனுமதி : புதிய மசோதா நிறைவேறியது
புதன் 27, மார்ச் 2024 5:53:30 PM (IST)
தாய்லாந்து நாடாளுமன்றத்தின் கீழவையில், தன்பால் ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் சமத்துவ திருமணத்துக்கான மசோதா, பெரும்பான்மையுடன் நிறைவேறியுள்ளது.
ஒரே பாலினத்தை சேர்ந்தவர்களின் திருமணத்தை அங்கீகரிக்கும் இந்த மசோதாவை நிறைவேற்றும் முதல் தெற்காசிய நாடு, தாய்லாந்து.தாய்லாந்தின் 415 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 400 பேர் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இந்த மசோதா, சிவில் மற்றும் வணிக குறியீடுகளில் ”ஆண் மற்றும் பெண்” என்கிற வார்த்தைகளை "தனிநபர்கள்” என்றும் "கணவன் மற்றும் மனைவி” என்கிற பதங்களை "மணம் புரிந்த இணையர்கள்” என்றும் திருத்தவுள்ளது.நிறைவேற்றப்பட்ட மசோதா செனட் அவைக்கும் அதன் பிறகு ராஜ்ய ஒப்புதலுக்கு மன்னருக்கும் அனுப்பப்படும்.
ஆசியாவில் தைவான், நேபாளம் நாடுகளுக்கு அடுத்து மூன்றாவது நாடாக தாய்லாந்து இந்த மசோதாவைக் கொண்டு வந்துள்ளது. அங்கு ஆட்சியில் இருக்கும் பியூ தாய் கட்சியின் செய்தித் தொடர்பாளர் டனுபோன், "பால் புதுமையினருக்கு அவர்களின் உரிமையை இந்த சட்டத்தின் மூலமாக நாங்கள் திருப்பி அளிக்கிறோம். அவர்கள் இழந்த அடிப்படை உரிமையை திருப்பி தருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த மசோதா "தாய் மற்றும் தந்தை” என்கிற பதத்துக்கு மாற்றாக "பெற்றோர்” என்பதை சேர்க்க மறுத்துள்ளது. பால் புதுமையினர் குடும்பமாக இணைந்து குழந்தையை வளர்த்தெடுக்க முயற்சி செய்வதை இது தடுப்பதாக செயல்பாட்டாளர்கள் விமர்சித்துள்ளனர்.சமத்துவத்துக்கும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகமாக இருப்பதற்கும் பெயர்பெற்ற தாய்லாந்து சில ஆண்டுகளாக இந்த மசோதாவை கொண்டுவர தடுமாறியது.