» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஆப்கானிஸ்தானில் பஸ் மீது டேங்கர் லாரி மோதி 21 பேர் பலி: 38 பேர் படுகாயம்!!
திங்கள் 18, மார்ச் 2024 10:19:27 AM (IST)
ஆப்கானிஸ்தானில் பஸ் மீது டேங்கர் லாரி மோதி 21 பேர் உயிரிழந்தனர். 38க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
ஆப்கானிஸ்தானின் தெற்கு கான்டகார் மாகாணத்தில் இருந்து மேற்கு மாகாணமான ஹெரத்தை இணைக்கும் வகையில் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஹெல்மந்த் மாகாணத்தின் வழியே செல்லும் இந்த நெடுஞ்சாலை நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த நெடுஞ்சாலை வழியாக தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இந்த நெடுஞ்சாலையில் அவ்வப்போது விபத்துகளும் அரங்கேறி வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் மிகவும் பரபரப்பான இந்தச்சாலையில் நேற்று காலை மோட்டார் சைக்கிள் வாகனம் ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை அந்த மோட்டர் சைக்கிள் இழந்து முன்னே சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ் மீது சொருகியது.
இதனால் தடுமாறிய பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவர் மீது மோதியது. மேலும் நெடுஞ்சாலையின் எதிர்திசையில் கியாஸ் பாரத்துடன் வந்து கொண்டிருந்த டேங்கர் லாரியின் மீது பயங்கர வேகத்துடன் மோதி விபத்திற்குள்ளானது.
கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சங்கிலித்தொடர் விபத்தில் டேங்கர் லாரியுடன் இணைந்து பஸ் தீப்பிடித்து எரிய தொடங்கியது. பின்னர் டேங்கர் லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் 2 வாகனங்களும் தீயில் கருகி எலும்புக்கூடாகின. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 21 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.
படுகாயம் அடைந்த 38 பேர் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.