» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட தடையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 5, மார்ச் 2024 5:07:06 PM (IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிட தடையில்லை என அமெரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் கடந்த 2016ல் போட்டியிட்ட குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று, நான்காண்டுகள் அதிபராக பதவி வகித்தார். கடந்த 2020ல் நடந்த தேர்தலில், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அதிபராக தேர்வானார். அவரை எதிர்த்து போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார்.
ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, அமெரிக்க பார்லிமென்டில் 2021 ஜன., 6ல் நடந்தது. அன்று பார்லி.,யை நோக்கி டிரம்ப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்தனர். அவர்களை பார்லி.,க்குள் நுழையவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அமெரிக்க பார்லிமென்ட் கட்டடத்தை முற்றுகையிடப்பட்ட வழக்கை விசாரித்த, கொலராடோ மாகாண நீதிமன்றம், 'அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட டிரம்ப் தகுதியற்றவர்' என, உத்தரவிட்டது. இதனை எதிர்த்து டிரம்ப் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிட தடையில்லை எனக் கூறி கொலராடோ நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தனர். இது குறித்து சமூக வலைதளத்தில் "அமெரிக்காவிற்கு பெரிய வெற்றி" என டிரம்ப் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில் வரும் 2024ம் ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.