» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ரூ.6,000 சம்பளத்திலிருந்து கோடிக் கணக்கில் சொத்து குவிப்பு: விசாரணையில் சிக்கிய அரசுப் பொறியாளர்!
திங்கள் 8, ஜூன் 2026 10:46:58 AM (IST)

ஒடிசா மாநிலத்தில் ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு முகமை உதவி செயற்பொறியாளராகப் பணியாற்றி வரும் வைகுண்ட நாத் பெஹ்ரா என்பவருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடிச் சோதனையில், ரூ.2 கோடி ரொக்கப் பணம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அசையாச் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஒடிசாவின் கந்தமால் மாவட்டம், பலிகுடாவில் உள்ள ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு முகமையில் (ITDA) உதவி செயற்பொறியாளராகப் பணியாற்றி வருபவர் வைகுண்ட நாத் பெஹ்ரா. இவர் தனது பதவியைப் பயன்படுத்தி, வருமானத்திற்கு அதிகமாக ஏராளமான சொத்துகளைத் தனியாகவும், தனது குடும்பத்தினர் பெயரிலும் வாங்கிக் குவித்துள்ளதாக மாநில லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அடுக்கடுக்கான புகார்கள் வந்தன.
இது குறித்து விரிவான விசாரணை மற்றும் சோதனை நடத்துமாறு புவனேஸ்வர் சிறப்பு நீதிமன்றம் மாநில லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அதிரடி உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, புவனேஸ்வர், பாலசோர், ஜாஜ்பூர் மற்றும் பலிகுடா ஆகிய பகுதிகளில் பெஹ்ராவுக்குத் தொடர்புடைய 9 முக்கிய இடங்களில் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக நுழைந்து சோதனையை மேற்கொண்டனர்.
இந்த அதிரடிச் சோதனை மற்றும் சொத்து மதிப்பு கணக்கீடு குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாவது: "பொறியாளர் வைகுண்ட நாத் பெஹ்ரா மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தொடர்புடையதாகச் சர்வதேசத் தரம் வாய்ந்த 5 பெரிய அடுக்குமாடி கட்டிடங்களை இந்தச் சோதனையின் போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் கண்டறிந்துள்ளனர். இதில் தலைநகர் புவனேஸ்வலில் மட்டும் சுமார் 10,500 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான 4 மாடி கட்டிடமும் ஒன்றாகும்.
மேலும் புவனேஸ்வர் மற்றும் ஜாஜ்பூர் மாவட்டப் பகுதிகளில் 4 வீடுகள், புவனேஸ்வரியின் மிக முக்கியப் பிரதான இடங்களில் அமைந்துள்ள 7 வீட்டுமனைகள், ஜாஜ்பூர் மற்றும் பாரிபடாவில் உள்ள பல்வேறு மனைகள் என ஒட்டுமொத்தமாக 13 சொகுசு நிலங்கள் கண்டறியப்பட்டு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமன்றி, பொறியாளரின் குடும்பத்தினருக்குச் சொந்தமான பல்வேறு வங்கி லாக்கர்களில் (Bank Lockers) நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத சுமார் ரூ.2 கோடி ரொக்கப் பணம் முழுமையாகக் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட மொத்த சொத்துகளையும் முழுமையாக மதிப்பிட்ட பிறகு, அவர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கைகள் தொடரும்" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.6,000 சம்பளத்தில் தொடங்கிய பணி:
தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையின் பிடியில் சிக்கியுள்ள வைகுண்ட நாத் பெஹ்ரா, கடந்த 1999-ஆம் ஆண்டு இளநிலை பொறியாளராக (Junior Engineer) வெறும் ரூ.6,000 மாதச் சம்பளத்தில்தான் அரசுப் பணியில் முதன்முதலாகச் சேர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில் பணியாற்றிய அவர், இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் உதவி செயற்பொறிஞராகப் (Assistant Executive Engineer) பதவி உயர்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகக் குறைந்த சம்பளத்தில் பணியில் சேர்ந்து, குறுகிய காலத்தில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அவர் அநியாயமாகக் குவித்துள்ளது ஒடிசா மாநில அரசு வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாரதிராஜா மறைவு இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு : சந்திரபாபு நாயுடு இரங்கல்!
புதன் 10, ஜூன் 2026 5:11:50 PM (IST)

வளர்ந்த இந்தியா இலக்கை நோக்கித் தொடர்ந்து முன்னேறுவோம் – பிரதமர் மோடி உறுதி!
புதன் 10, ஜூன் 2026 12:23:27 PM (IST)

அரசுப் பள்ளிகளில் மட்டுமே பிள்ளைகளை சேர்ப்போம் : தெலங்கானா கிராம மக்கள் அதிரடித் தீர்மானம்!
புதன் 10, ஜூன் 2026 12:13:28 PM (IST)

அதிமுகவிலிருந்து விலகிய 4 எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:15:29 PM (IST)

உஜ்வாலா மானிய கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை 4 ஆகக் குறைப்பு: பயனாளிகளுக்கு அதிர்ச்சி!
செவ்வாய் 9, ஜூன் 2026 10:40:06 AM (IST)

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்: இண்டியா கூட்டணி வலியுறுத்தல்
செவ்வாய் 9, ஜூன் 2026 10:18:50 AM (IST)









