» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சனாதனம் சர்ச்சை பேச்சு: அமைச்சர் உதயநிதிக்கு நிபந்தனை ஜாமீன்!
செவ்வாய் 25, ஜூன் 2024 12:20:28 PM (IST)
சனாதன விவகாரம் தொடர்பாக பேசிய அமைச்சர் உதயநிதிக்கு, பெங்களூரு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போல் ஒழிக்கவேண்டும் என்று பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு நாடு முழுவதும் பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. உதயநிதி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்கோரி பெங்களூருவை சேர்ந்த பரமேஷ் பெங்களூருவில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு அமைச்சர் உதயநிதிக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இன்று (ஜூன் 25) பெங்களூரு நீதிமன்றத்தில் உதயநிதி ஆஜரானார். அப்போது உதயநிதிக்கு ரூ.1 லட்சம் ரொக்க பிணையில், நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தது.