» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நீட் தேர்வு முறைகேடு: தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
வியாழன் 20, ஜூன் 2024 5:45:48 PM (IST)
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட 4 மனுக்களுக்கு தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
நடந்து முடிந்த மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்ததோடு அவர்களுக்கு ஜூன் 23ம் தேதி மறு தேர்வு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று (ஜூன் 20) நீதிபதி விக்ரம்நாத் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது: தற்போது மறுத்தேர்வு எழுத உள்ள 1563 மாணவர்கள் பட்டியலை வெளியிட வேண்டும். நீட் தேர்வு மீதான நம்பகத் தன்மை பாதிக்கப்பட்டுள்ளதால், தேசிய தேர்வு முகமை வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும்.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட 4 மனுக்களுக்கு தேசிய தேர்வு முகமை ஜூலை 8க்குள் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, நீட் தேர்வு தொடர்பாக உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் மீதான விசாரணைக்கும் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.