» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கிணற்றில் விழுந்த பூனையை மீட்க முயற்சி: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!
புதன் 10, ஏப்ரல் 2024 12:50:50 PM (IST)
நாசிக்கில், கிணற்றில் விழுந்த பூனையை மீட்க முயன்றபோது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம் வக்கடி கிராமத்தில் நேற்று மாலை, ஒரு பூனை கிணற்றில் விழுந்ததைப் பார்த்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5பேர், பூனையை மீட்க முயன்றுள்ளனர். ஒருவர் கிணற்றில் இறங்கியதும், அவர் விஷ வாயுத் தாக்கி மயங்கியதும், அவரைக் காப்பாற்ற மற்றொருவர் இறங்க இப்படியே ஐந்து பேரும் பலியாகியுள்ளனர். மேலும், ஒரே ஒருவர் மீட்டும் கிராமத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல்துறையினர் வந்து, கிணற்றில் விழுந்த உடல்களை மீட்கும் பணியைத் தொடங்கினர். மின்சாரம் இல்லாததால் இப்பகுதியில் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. கிணறு முழுக்க சேறு இருந்ததால், சேற்றுக்குள் சிக்கிய உடல்களை மீட்க, மிகப்பெரிய சேறு அகற்றும் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு, சேறு அகற்றப்பட்ட பிறகே உடல்களை மீட்க முடிந்ததாகவும், இதனால் உடல்களை மீட்கும் பணி நள்ளிரவு வரை நடந்ததாகவும் கூறப்படுகிறது.