» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வட இந்திய மாநிலங்களில் கடும் பனிமூட்டம் : ஆறு மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்!
சனி 27, ஜனவரி 2024 5:20:20 PM (IST)
கடும் பனிமூட்டம் காரணமாக பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
கடும் பனி மூட்டம் காரணமாக வட மாநிலங்களில் ரயில், விமான சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நாட்டில், பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர், உத்தர பிரதேசம், பிகார், ராஜஸ்தான் ஆகிய ஆறு மாநிலங்களிலும் ஜனவரி 28ஆம் தேதி வரை கடும் பனிமூட்டம் நிலவும் என்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹிமாலயப் பகுதிகளில் ஜனவரி 30 வரை லேசான மழை அல்லது பனிமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. நாளை வரை வட இந்திய மாநிலங்களில் கடுங்குளிர் நிலவும் என்றும், அதன்பிறகு மெல்ல குளிரின் அளவு குறையத் தொடங்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடுங்குளிருக்கு இடையே, புது தில்லியில் காற்றின் தரம் மோசமாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.