» சினிமா » செய்திகள்
புரட்சிக்கவிஞரின் பாடல் வரிகளை சுட்டிக்காட்டிய இசைப்புயல்!!
சனி 9, ஏப்ரல் 2022 12:41:37 PM (IST)
‘ழ’கரம் ஏந்திய தமிழணங்கு என்ற புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 37-வது கூட்டம் அதன் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா பேசுகையில், இந்தியை ஆங்கிலத்துக்கு மாற்றாக ஏற்க வேண்டும் என்று பேசினார். இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளை குறிப்பிட்டு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கருத்து தெரிவித்துள்ளார். இதன்படி புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற கவிதையில் வரும், ‘இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்’ என்ற வரிகளை ஏ.ஆர்.ரகுமான் சுட்டிக்காட்டி பதிவு ஒன்றினை இட்டுள்ளார்.
இதுதொடர்பாக தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ழகரம் ஏந்திய தமிழணங்கு என்ற வார்த்தைகளை தாங்கிய போட்டோ ஒன்றை ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டிருக்கிறார். அதில் 'ழ' கரத்தை தங்கிய பெண் தாண்டவமாட, கீழே 'தமிழணங்கு' என்றும், புரட்சிக்கவிஞரின் பாடல் வரிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.