» சினிமா » செய்திகள்
துபாயில் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவை பார்வையிட்ட முதல்வர்!
சனி 26, மார்ச் 2022 10:21:24 AM (IST)
துபாயில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் அவரது ஸ்டூடியோவிற்கு சென்றார்.
தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, 4 நாட்கள் பயணமாக துபாய் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று மாலை துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் பங்கேற்றார். இந்திய அரங்கை பார்வையிட்ட அவர், அங்கு அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு தளத்தை திறந்து வைத்தார். அப்போது பேசிய முதலமைச்சர், தமிழ்நாட்டின் பெருமைகளை உலகிற்கு பறைசாற்றும் வகையில் அரங்கு அமைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
அந்த அரங்கின் முகப்பில் ‘மேட் இன் தமிழ்நாடு’ என்ற இலச்சினை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த அரங்கை திறந்து வைத்த பிறகு கண்காட்சியில் தமிழ்நாடு வாரக் கொண்டாட்டத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது, துபாயில் உள்ள தனது ஸ்டூடியோவிற்கு வருமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அழைப்பு விடுத்துள்ளார்.
அதைத்தொடர்ந்து, இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் அவரது ஸ்டூடியோவிற்கு சென்றார். அங்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள மூப்பில்லா தமிழே தாயே என்ற ஆல்பம் குறித்து கூறி, அதனை போட்டுக்காட்டியுள்ளார். மூப்பில்லா தமிழே தாயே பாடலை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழுக்கும் இசைக்கும் உலகில் எல்லை இல்லை" என தனது ட்வீட்டர் பதிவில் பாராட்டு தெரிவித்துள்ளார்