» சினிமா » செய்திகள்
இதுதான் கடைசி என்று எதிர்பார்க்கவில்லை : எஸ்பிபி குறித்து ரஜினிகாந்த் உருக்கம்!
செவ்வாய் 5, அக்டோபர் 2021 11:32:37 AM (IST)
அண்ணாத்த படத்திலிருந்து மறைந்த எஸ்.பி.பி பாடிய முதல் பாடல் வெளியாகியுள்ள நிலையில், 45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்தவர் எஸ்பிபி என நடிகர் ரஜினி கூறியுள்ளார்.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 4-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், அண்ணாத்த படத்திலிருந்து மறைந்த எஸ்.பி.பி பாடிய முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்தப் பாடல் தொடர்பாக ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: "45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி 'அண்ணாத்த' படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின்போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்துகொண்டே இருப்பார்". இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.