» சினிமா » செய்திகள்

நாகேஷ் பெயரில் சாலை: தமிழக அரசுக்கு கமல் கோரிக்கை

திங்கள் 27, செப்டம்பர் 2021 5:08:11 PM (IST)



சென்னையில் ஒரு சாலைக்கு நாகேஷின் பெயரைச் சூட்ட வேண்டும் எனவும், சிலை நிறுவ வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காமெடி, குணச்சித்திரம் எனப் பல்வேறு கதாபாத்திரங்களில் தனது நடிப்பால் அசத்தியவர் நாகேஷ். 2009-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி காலமானார். இன்று அவருடைய நினைவு நாள். இதனை முன்னிட்டுப் பலரும் நாகேஷ் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து வருகிறார்கள். 

தனது படங்களில் நாகேஷுக்குத் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கிய கமல்ஹாசன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "நகைச்சுவை நடிப்பில் தனக்கென தனி முத்திரையைப் பதித்த நாகேஷ் இந்திய சினிமாவின் இணையற்ற நடிகர்களில் ஒருவர். 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்து தமிழர்களை மகிழ்வித்தவர். இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ், தமிழகத்தின் சார்லி சாப்ளின் என்றெல்லாம் அவரது நடிப்பு ஊடகங்களால் புகழப்பட்டது.

1958-ல் 'மனமுள்ள மறுதாரம்' படத்தில் அறிமுகமாகி 2008-ல் 'தசாவதாரம்' வரை மிகச்சரியாக அரை நூற்றாண்டுகள் நீடித்தது அவரது கலைப் பயணம். எங்கும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக் கொள்வதோ, விருதுகள், அங்கீகாரங்களுக்கோ ஆள் பிடிப்பதோ நாகேஷின் இயல்பல்ல. அதன் பொருட்டே வாழும்போதும் வாழ்ந்த பிறகும் புறக்கணிக்கப்பட்ட மகா கலைஞன் அவர்.

1974-ல் தமிழக அரசு அளித்த கலைமாமணி விருது, 1994-ல் 'நம்மவர்' திரைப்படத்திற்காக மத்திய, மாநில அரசுகளின் சிறந்த துணை நடிகர் விருது ஆகியவைதான் அவரது கலை வாழ்வில் கிடைத்த சிறு அங்கீகாரங்கள். என்னைப் பொறுத்தவரையில் சினிமாவின் எந்த உயரிய விருதுக்கும் தகுதியானவர் நாகேஷ். இவர் பிரான்ஸிலோ, அமெரிக்காவிலோ, ஜெர்மனியிலோ பிறந்திருந்தால் இவர் பெற்றிருந்திருக்கக் கூடிய கவுரவம் என்னவாக இருந்திருக்கும் என்பதை ஊகித்துப் பார்க்கிறேன். அவர் மறைந்து 12 ஆண்டுகள் ஆன பிறகும் கூட அவர் மீதான அரசின் புறக்கணிப்பு தொடர்வது ஒரு சக கலைஞனாக எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

இந்த மகத்தான நடிகரின் கலைப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் சென்னையில் ஒரு சாலைக்கு அவரது பெயரைச் சூட்டுவதும், அவரது பெயரில் ஒரு விருதினைத் தோற்றுவிப்பதும், எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன வளாகத்திற்குள் அவரது சிலையை அமைப்பதும் குறைந்தபட்ச அங்கீகாரங்களாக அமையும். கலைஞர்களைப் போற்றுவதும் நல்லரசின் கடமை என்பதை உணர்ந்து தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்". இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory