» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: நியூசிலாந்து 301 ரன்கள் முன்னிலை

வெள்ளி 25, அக்டோபர் 2024 5:03:24 PM (IST)



இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி 2-வது நாள் ஆட்டம் முடிவில் நியூசிலாந்து  அணி 301 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது.

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் 3 மாற்றமாக லோகேஷ் ராகுல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டனர். நியூசிலாந்து அணியில் மேட் ஹென்றிக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னெர் இடம் பிடித்தார்.

இந்த போட்டியில் 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் டாம் லதாம் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். சுழலுக்கு சாதகமான இந்த மைதானத்தில் இரு அணிகளிலும் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தினர். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கான்வே 76 ரன்களும்,ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்களான சுந்தர் 7 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி மிட்செல் சான்ட்னரின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 156 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 38 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் சான்ட்னர் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 103 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன கான்வே 17 ரன்களிலும், அவரை தொடர்ந்து வில் யங் 23 ரன்களிலும், ரவீந்திரா 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தாலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன கேப்டன் டாம் லதாம் பொறுப்புடன் விளையாடி அணியை முன்னெடுத்து சென்றார். அவருக்கு சிறிது ஒத்துழைப்பு கொடுத்த டேரில் மிட்செல் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்த லதாம் 86 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். 

இந்த இன்னிங்சிலும் வாஷிங்டன் சுந்தரே விக்கெட் வேட்டை நடத்தினார். 2-வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் அடித்துள்ளது. டாம் பிளண்டெல் 30 ரன்களுடனும், கிளென் பிலிப்ஸ் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சுந்தர் 4 விக்கெட்டுகளும், அஸ்வின் 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். நியூசிலாந்து இதுவரை 301 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


CSC Computer Education



Arputham Hospital





Thoothukudi Business Directory