» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றியுடன் துவங்கிய இந்திய அணி!

சனி 20, ஜூலை 2024 10:32:19 AM (IST)



ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் பேட் செய்தது. பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.2 ஓவர்களில் 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸித்ரா அமீன் 25 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, துபா ஹாசன் மற்றும் ஃபாத்திமா சனா அதிகபட்சமாக தலா 22 ரன்கள் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ரேனுகா சிங், பூஜா வஸ்த்ரகார் மற்றும் ஸ்ரேயங்கா பாட்டீல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இருவரும் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தனர். இந்திய அணி 85 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டினை இழந்தது. சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 31 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும்.

அதன்பின் தயாளன் ஹேமலதா களமிறங்கினார். பாகிஸ்தான் வீராங்கனை நஸ்ரா சாந்து பந்துவீச்சில் ஹாட்ரிக் பவுண்டரிகள் அடித்து அசத்தினார் ஹேமலதா. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ஷஃபாலி வர்மா 29 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

இறுதியில் இந்திய அணி 14.1 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் சயீதா அரூஃப் ஷா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நஸ்ரா சாந்து ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய மகளிரணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital




CSC Computer Education

New Shape Tailors




Thoothukudi Business Directory