» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
தீபக் ஹூடா, இஷான் கிஷன் அதிரடி: அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி!
திங்கள் 27, ஜூன் 2022 10:41:48 AM (IST)
தீபக் ஹூடா, இஷான் கிஷன் மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் அதிரடி ஆட்டத்தில் அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் வகையில் அயர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி ‘தி வில்லேஜ்’ கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. மழை குறுக்கீடு காரணமாக ஒவ்வொரு அணிக்கும் தலா 12 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றி அமைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 12 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்தது.
அந்த அணிக்காக அதிகபட்சமாக ஹேரி டெக்டர் 33 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். சஹால், புவனேஷ்வர், ஹர்திக் பாண்டியா மற்றும் ஆவேஷ் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர். சஹால் மிகவும் எக்கனாமியாக பந்து வீசி இருந்தார். 3 ஓவர்களில் வெறும் 11 ரன்கள் தான் விட்டுக் கொடுத்திருந்தார் அவர். இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் இந்த போட்டியின் மூலம் சர்வதேச டி20 தொடரில் அறிமுக வீரராக களம் கண்டார்.
109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்திய அணி விரட்டியது. இஷான் கிஷன் மற்றும் தீபக் ஹூடா தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கிஷன், 11 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ், ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். ஹர்திக் பாண்டியா 12 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
9.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது இந்திய அணி. தீபக் ஹூடா 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தார். தினேஷ் கார்த்திக், 4 பந்துகளில் 5 ரன்கள் எடுத்திருந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 16 பந்துகள் எஞ்சியிருக்க 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. சஹால், ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த தொடரின் அடுத்த போட்டி நாளை நடைபெற உள்ளது.