» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
மாலத்தீவுக்குப் புறப்பட்ட ஆஸி. வீரர்கள்: பிசிசிஐக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் நன்றி!!
வியாழன் 6, மே 2021 3:43:48 PM (IST)
மாலத்தீவுக்குப் ஆஸி வீரர்களை பத்திரமாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்த பிசிசிஐக்கு "கிரிக்கெட் ஆஸ்திரேலியா" நன்றி தெரிவித்துள்ளது.
ஐபிஎல் 2021 போட்டிகள் சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், டெல்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை, மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற்றன. அடுத்ததாக ஆமதாபாத், டெல்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐபிஎல் 2021 போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
52 நாள்களில் 60 ஆட்டங்கள் நடைபெற இருந்தன. ஆனால் 24 நாள்களில் 29 ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றன. இதனிடையே ஆஸ்திரேலிய அரசு இந்திய விமானங்களுக்கு மே 15 வரை தடை விதித்துள்ளதால், தற்போதைய நிலையில் அந்நாட்டு வீரா்கள் மாலத்தீவுகளுக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு சில நாள்கள் தங்கியிருந்து பிறகு அவா்கள் ஆஸ்திரேலியா புறப்படுகின்றனா்.
ஐபிஎல் போட்டிக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராகப் பணியாற்றிய ஆஸி. முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லேடர், சில நாள்களுக்கு முன்பு கரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறி மாலத்தீவுக்குச் சென்றார். ஸ்லேடர் வழியைப் பின்பற்றி ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற ஆஸி. வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் எனக் கிட்டத்தட்ட 40 பேரும் டெல்லியில் கூடி, அங்கிருந்து அவா்கள் தனி விமானத்தில் மாலத்தீவுகள் சென்றுள்ளார்கள்.
இதையடுத்து பிசிசிஐக்கு நன்றி தெரிவித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கமும் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஐபிஎல்-லில் பங்கேற்ற ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் பாதுகாப்பாக இந்தியாவிலிருந்து மாலத்தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா செல்லும் விமானங்களுக்கான தடை முடியும் வரை அவர்கள் மாலத்தீவில் இருப்பார்கள்.
ஏற்கெனவே கூறியபடி ஆஸ்திரேலிய அரசிடம் நாங்கள் விலக்கு கோரவில்லை. ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்ட இரு நாள்களில் ஆஸ்திரேலிய நாட்டினரை மாலத்தீவுக்கு அனுப்பி வைத்த பிசிசிஐக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். கரோனாவால் பாதிக்கப்பட்ட மைக் ஹஸ்ஸி, இந்தியாவில் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக்கொள்வார். லேசான அறிகுறிகளுடன் உள்ள மைக் ஹஸ்ஸி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பாதுகாப்பில் உள்ளார். அவர் ஊருக்குத் திரும்புவது பற்றி பிசிசிஐயுடன் இணைந்து செயலாற்றுவோம் என்று கூறப்பட்டுள்ளது.