» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லையில் காதல் திருமணம் செய்த 2 நாளில் தம்பதி தற்கொலை: போலீசார் விசாரணை
திங்கள் 10, பிப்ரவரி 2025 8:38:30 AM (IST)
நெல்லையில், காதல் திருமணம் செய்த 2 நாளில் புதுமணத் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை பாளையங்கோட்டை கோட்டூர் ரோடு பார்வதி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 7-ந் தேதி புதுமண தம்பதியர் வாடகைக்கு குடியேறினர். அவர்கள் வீட்டின் உரிமையாளரிடம், ‘‘நாங்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள்” என்று கூறினர். பின்னர் அவர்கள் தங்கியிருந்த வீடு நேற்று முன்தினம் மாலையில் இருந்து நேற்று மதியம் வரையிலும் பூட்டியே கிடந்தது. வீட்டின் வெளிப்புறம் மின்விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
இதனால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள், அந்த வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். அப்போது படுக்கை அறையில் 2 பேரும் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக வீட்டு உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். வீட்டு உரிமையாளர் இதுபற்றி பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 2 பேரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இறந்தவர்கள் சென்னை ராயபுரம் துரை தெருவைச் சேர்ந்த முத்து மகன் விஜயன் (26), சென்னை திருவொற்றியூர் ஒண்டிக்குப்பத்தைச் சேர்ந்த காந்தி மகள் பவித்ரா (24) என்பது தெரிய வந்தது. ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில் இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறி 2 நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டு நெல்லையில் குடியேறியதும், பின்னர் அவர்கள் தற்கொலை செய்ததும் தெரிய வந்தது.
இதுதொடர்பாக புதுமண தம்பதியரின் பெற்றோர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். மேலும் அவர்களின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லையில் காதல் திருமணம் செய்த 2 நாளில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை அருகே கூட்டம், கூட்டமாக வலசை வந்த வெளிநாட்டு பறவைகள்!
செவ்வாய் 20, ஜனவரி 2026 8:03:08 PM (IST)

நாகர்கோவிலில் பராமரிப்பு பணி: 5 விரைவு ரயில்கள் கன்னியாகுமரியில் இருந்து புறப்படும்!
செவ்வாய் 20, ஜனவரி 2026 4:20:22 PM (IST)

அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையை வாசிப்பது ஆளுநரின் கடமை: சபாநாயகர் அப்பாவு
செவ்வாய் 20, ஜனவரி 2026 3:53:55 PM (IST)

சட்டசபையில் இருந்து வெளியேறியது ஆளுநர் பதவிக்கு அழகல்ல: ஸ்டாலின் கண்டனம்!
செவ்வாய் 20, ஜனவரி 2026 12:25:01 PM (IST)

தமிழக அரசு மீது 13 குற்றச்சாட்டுகள்: வெளிநடப்பு செய்தது குறித்த ஆளுநர் விளக்கம்!
செவ்வாய் 20, ஜனவரி 2026 12:12:17 PM (IST)

நெல்லை அருகே அக்காவை வெட்டிக்கொன்ற வாலிபர் கைது: பரபரப்பு வாக்குமூலம்!
செவ்வாய் 20, ஜனவரி 2026 8:09:16 AM (IST)








