» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாட்டில் இயல்பைவிட 60% அதிக மழைக்கு வாய்ப்பு: புயல் சின்னம் உருவாகிறது!

வியாழன் 31, அக்டோபர் 2024 9:23:03 AM (IST)

தமிழ்நாட்டில் நவம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 60 சதவீதம் அதிகமாக பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், 20 முதல் 25-ஆம் தேதிக்குள் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வருகிற 5-ஆம் தேதியில் இருந்து வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, நவம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் சராசரியாக 19 செ.மீ. மழை பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 25 செ.மீ. முதல் 30 செ.மீ. வரை 4 சுற்றுகளாக மழை பதிவாக வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இது இயல்பைவிட 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை அதிக மழை ஆகும்.

இதுமட்டுமல்லாமல், வருகிற 10-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் குறுகிய காலத்தில் அதி கனமழையும், இயல்பைவிட அதிகமான மழையும் பதிவாகும் என்றும் கணித்துள்ளனர்.

அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட வட கடலோர, டெல்டா மாவட்டங்களில் குறுகிய காலத்தில் பெருமழை பெய்து பாதிப்பை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.

இதேபோல், தென் கடலோர மாவட்டங்களான புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நவம்பரில் இயல்பு அல்லது இயல்புக்கு அதிகமாக மழை பதிவாகக்கூடும் எனவும், ஓரிரு இடங்களில் 20 செ.மீ.க்கு மேல் அதி கனமழைக்கான வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 10-ஆம் தேதியையொட்டி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக சாதகமான சூழல் காணப்படுவதாகவும், அது மேலும் வலுவடைந்து பருவமழையை மேலும் தீவிரப்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும், அதிலும் 20-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதிக்குள் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி தமிழ்நாட்டின் வடகடலோரப் பகுதிகளை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital


New Shape Tailors

CSC Computer Education




Thoothukudi Business Directory