» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000 மாத உதவித் தொகை திட்டம்: ஜூலையில் தொடங்குகிறது!

திங்கள் 27, ஜூன் 2022 4:51:11 PM (IST)

"அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜூலை மாதத்தில் தொடங்கி வைப்பார்" என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "அரசுப் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம், எல்லாவற்றிலும் சேர்த்து, தொழிற் கல்வி (Vocational Course) படித்த மாணவர்களுக்கு இரண்டு சதவீத இடஒதுக்கீடு கொடுத்து, அனைத்து இடங்களிலும், தொழிற் கல்வி படித்த மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இந்த படிப்பை படிக்கின்ற மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் வாங்கிவிடுவர். இவர்களுக்கு செய்முறைத் தேர்வுகளிலேயே நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் கிடைக்கிறது. எனவே பொறியியல் கல்லூரிகளில் இநதாண்டு முதல் தொழிற் கல்வி படித்தவர்களுக்கு அனைத்து கல்லூரிகளிலும் இரண்டு சதவீத இடஒதுக்கீடு கொடுக்கப்படும்.

6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த பெண்களுக்கு, ஆயிரம் ரூபாய் மாத உதவித் தொகை தொடர்பாக நிறைய விண்ணப்பங்கள் வந்துகொண்டிருக்கின்றன. தமிழகத்தில் உள்ள பெற்றோர்கள், மாணவிகள் அனைவருக்கும் இந்த செய்தி தெரிந்து, அதற்கான விண்ணப்பங்களை அளித்துக் கொண்டுள்ளனர். முதல் நாளிலேயே 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன.

6-ம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த பெண்கள், எந்தக் கல்லூரியில், எத்தனை பேர் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற கணக்கையும் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அந்த தகவல்கள் சரியாக உள்ளனவா என்பதையும் சரிபார்த்துக் கொண்டிருக்கிறோம். இவையெல்லாம் சரி செய்யப்பட்ட பின்னர், முதல்வர் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை ஜூலை மாதத்தில் தொடங்கிவைப்பார்.

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளிவந்த பின்னர்தான், கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படும். தமிழகம் முழுவதும் தனியார், அரசு கலைக் கல்லூரிகளில் வரும் ஜூலை 18-ம் தேதி முதல் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory