» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஓபிஎஸ் - இபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்திக்கின்றனர்
ஞாயிறு 25, ஜூலை 2021 4:33:32 PM (IST)
பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை சந்திப்பதற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லிபுறப்பட்டுச் சென்றார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து தில்லிக்கு புறப்பட்டார். அவரை அதிமுகவினர் வழியனுப்பி வைத்தனர். ஓபிஎஸ்-யைத் தொடர்ந்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமியும் இன்று இரவு டெல்லிபுறப்படுகிறார். ஏற்கெனவே ஓபிஎஸ்-உடன் அதிமுகவின் மனோஜ் பாண்டியன் சென்றுள்ள நிலையில், பழனிசாமியுடன் வேலுமணி உள்ளிட்ட ஒரு சிலர் செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது சேலம் மாவட்டத்தில் இருக்கும் எடப்பாடி கே பழனிசாமி, கோவை சென்று அங்கிருந்து இன்று இரவு டெல்லிபுறப்பட உள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்தது. பின்னர் எதிர்க் கட்சித் தலைவர் பதவி முதல் பாஜக கூட்டணி குறித்து அதிமுகவினர் பேசியது வரை கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. மேலும் அதிமுகவைச் சேர்ந்த பலரும் திமுகவில் இணைந்து வருகின்றனர். அதிமுகவுக்கும் சசிகலாவுக்கு இடையேயான பிரச்னை ஒரு பக்கம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஓபிஎஸ் -இபிஎஸ் இருவரும் தமிழக அரசியல் சூழல், சமீபத்திய மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிமுகவுக்கு இடமளிக்கப்படாதது, வருகிற உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்டவை குறித்து இந்த சந்திப்பில் பேசப்படலாம் என்று தெரிகிறது. அதுமட்டுமின்றி மேகதாது அணை விவகாரம் குறித்து அதிமுக தரப்பில் இவர்கள் இருவரும் பிரதமரிடம் பேச வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.