» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஓவர்லோடு குண்டுக்கல் வாகனங்களால் உயிர்பலி அபாயம்: நடவடிக்கை எடுக்க மதிமுக கோரிக்கை
சனி 24, ஜூலை 2021 5:30:02 PM (IST)
சிவகிரி பகுதியில் ஓவர் லோடு குண்டுக்கல் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் உயிர் பலி ஏற்படுத்துவதற்கு முன் தடுத்து நிறுத்த வேண்டும் என மதிமுக வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு மதிமுக மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் அனுப்பியுள்ள மனு: தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே திருமலாபுரம் பாகம் 2 தலையணை சாலையில் தனியார் குவாரி உள்ளது. இங்கு கற்கள் உடைக்கும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த குவாரிக்கு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து குண்டுக்கல் வாகனங்களில் கொண்டு வரப்படுகிறது. தினமும் 6 யூனிட் குண்டுக்கல் ஓவர் லோடாக டாரஸ் வாகனத்தில் ஏற்றி கொண்டு வரப்படுகிறது.
இப்படி தினமும் 200 வாகனங்களில் 1,200 யூனிட் குண்டுக்கல் கொண்டு வரப்படுகிறது. ஓவர் லோடு குண்டுக்கல் கொண்டு வரப்படுவதாலும். அந்த வாகனங்கள் அதி வேகமாக வருவதாலும் வாகனங்களில் இருந்து குண்டுக்கல் சாலைகளில் தெறித்து விழும் நிலை தொடர்ந்து வருகிறது. இதனால் சாலைகளில் செல்வோர், அவ்வழியே வாகனங்களில் செல்வோர் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்ற நிலை உள்ளது.
இதுகுறித்து டாரஸ் வாகன டிரைவர்களிடம் கேட்டால் அவர்கள் ஏளனமா கேள்வி கேட்பவர்களை பார்த்து அப்படித்தான் செல்வோம் என்று கூறுகின்றனர். குண்டுக்கல் ஓவர் லோடு ஏற்றி வரும் வாகனங்களை காவல்துறையினரும் கண்டு கொள்வதில்லை. சிவகிரியில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர்கள் பார்வையில் ஓவர்லோடு குண்டுக்கல் ஏற்றி வரும் வாகனங்கள் மட்டும் சிக்காமல் இருப்பதன் மர்மம் என்ன என்று புரியவில்லை.
மேலும் சிவகிரி பகுதியில் எம்.சாண்ட் ஏற்றிச் செல்லும் சில வாகனங்கள் மணல் கடத்தலிலும் ஈடுபடுகின்றன. வாகனங்களில் மேல்பகுதியில் எம்சாண்ட், உள் பகுதியில் மணல் வைத்து கொண்டு செல்லப்படுகிறது.குண்டுக்கல் ஓவர் லோடு, மணல் கடத்தல் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குண்டுக்கல் ஓவர் லோடால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட இருப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் ஓர் லோடு கற்கள் ஏற்றி செல்வது குறித்தும் அதனால் ஏற்பட இருக்கும் ஆபத்து குறித்தும், இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பாதிக்கப்படுவது குறித்தும், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மாவட்ட மதிமுக செயலாளர் ராஜேந்திரன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அம்மனுவில் ஓவர் லோடுக்கு காரணமாக இருக்கும் கல்குவாரி முறையாக அனுமதி பெற்று இயக்கப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை மனுவில் வலியுறுத்தியுள்ளார். மேலும் கனிமவளத் துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.