» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சுற்றுச்சூழல் பாதிக்காமல் சுரங்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்

சனி 24, ஜூலை 2021 4:42:43 PM (IST)

சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் பாதிக்காமல் சுரங்கப் பணிகளை மேற்கொள்வது குறித்து நிலையான சுரங்கக் கொள்கையை உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புவியியல் மற்றும் சுரங்கத்துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (24.07.2021) தலைமைச் செயலகத்தில், நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் பாதிக்காமல் சுரங்கப் பணிகளை மேற்கொள்வது குறித்து நிலையான சுரங்கக் கொள்கையை (Sustainable Mining Policy) உருவாக்க வேண்டும் என்று அறிவுறுத்திய  முதலமைச்சர் ஸ்டாலின், செயற்கை மணல் தயாரிப்பு மற்றும் விற்பனையை ஒழங்குமுறைப்படுத்த புதிய கொள்கை உருவாக்குவது குறித்தும், கனிம வருவாயை அதிகரிக்க எடுக்கப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

பயன்பாட்டில் இல்லாத குவாரிகளைக் கண்டறிந்து, வாய்ப்புள்ள இடங்களில் அக்குவாரிகளை மழைநீர் சேகரிப்பு அமைப்புகளாக மாற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்குப் பாதிப்பு விளைவிப்பதாக உள்ள பயனற்ற கல்குவாரிகளை மறுசீரமைப்பு செய்து, பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், திருவக்கரை கிராமத்தில் 2 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்மரப் படிமங்கள் மற்றும் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள தொல்லுயிர்ப் படிமங்கள் ஆகியவற்றைப் பாதுகாத்து யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டது.

புவியியல் மற்றும் சுரங்கத்துறையில், குத்தகை விண்ணப்பம் பெறுவதில் தொடங்கி, குவாரி குத்தகை உரிமம் மற்றும் நடைச்சீட்டு வழங்கும் வரை சுரங்க நிர்வாகத்தில் மின்னணு சேவை முறையை ஏற்படுத்த விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள  முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு கனிம நிறுவனம், அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ.250 கோடி அளவிற்கு வருவாயினை உயர்த்த முயற்சி மேற்கொள்ள வேண்டுமெனவும், சிவகங்கை மாவட்டத்தில் கிடைக்கும் கிராபைட்டில் இருந்து அதிக செறிவூட்டப்பட்ட உயர்தர கிராபைட் தயாரிப்பதற்கு உரிய தொழில்நுட்ப முறை குறித்து ஆய்வு மேற்கொள்ளவும், அரக்கோணம் அருகில் செயற்கை மணலைத் தயாரிக்க புதிய உற்பத்திப் பிரிவு தொடங்கவும் செயல் திட்டங்களை உருவாக்க  முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் கூடுதல் சுரங்கப் பகுதிகளை அடுத்த மூன்று வருடத்தில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும், உலகத்தரம் வாய்ந்த ஆலோசகரை நியமித்து உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில்,  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், தொழில்துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், தொழில்துறை சிறப்பு செயலாளர் ரா.லில்லி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் இல. நிர்மல் ராஜ், தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கதிவரன், தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் முனைவர் இரா.பிருந்தா தேவி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory