» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் மீண்டும் திறக்க முதல்வர் அனுமதிக்க மாட்டார் :‍ துரை வைகோ உறுதி

வெள்ளி 20, பிப்ரவரி 2026 7:59:18 AM (IST)



தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படுவதை முதல்வர் அனுமதிக்க மாட்டார் என்று மதிமுக முதன்மை நிலையச் செயலாளர் துரை வைகோ எம்.பி., தெரிவித்தார். 

கோவில்பட்டியில் மதிமுக முதன்மை நிலையச் செயலாளர் துரை வைகோ எம்.பி., செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பதை மதிமுக வரவேற்கிறது. இதன் மூலம் கூட்டணி மேலும் வலுப்பெறும். தமிழகத்தில் பிரதானப் போட்டி என்பது திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கு இடையேதான் நிலவுகிறது.

மதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும், வேட்பாளர்கள் யார் என்பது குறித்து வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி தொடங்கவுள்ள பேச்சுவார்த்தைக்குப் பின்னரே அறிவிக்கப்படும். மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சியின் தலைமை இறுதி முடிவெடுக்கும். கூட்டணித் தலைமைக்கு இடங்களுக்காக நெருக்கடி கொடுக்கக் கூடாது. ஜனநாயகத்தைக் காப்பதற்கான இந்தத் தேர்தல் யுத்தத்தில், அனைவரும் வெற்றி இலக்கை நோக்கி மட்டுமே பயணிக்க வேண்டும்.

நடிகர் விஜய், மத்திய பாஜக அரசை எதிர்த்தோ அல்லது தமிழக நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்தோ இன்னும் வெளிப்படையாகப் பேசவில்லை. எனவே, அவரது அரசியல் வருகை என்பது திமுக கூட்டணிக்குச் சாதகமாகத்தான் அமையும் என்று நான் பார்க்கிறேன்.

தற்போது மக்காச்சோளம் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் வேதனையில் உள்ளனர். இவ்விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

அதேபோல், 'கிரீன் காப்பர்' என்ற பெயரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன. இதனைத் தமிழக முதல்வர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். திமுக அரசின் சாதனைகள் மக்கள் அறிந்ததே. தேர்தல் நெருங்குவதால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேவையற்ற அவதூறுகளைப் பரப்பி வருகிறார்.

பேட்டியின் போது மதிமுக மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன், வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் விநாயகா ஜி.ரமேஷ், மாநிலத் தீர்மானக் குழு உறுப்பினர் முத்துச்செல்வம், கிரிவலம் ஒன்றியச் செயலாளர் ராஜகோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

இதுFeb 20, 2026 - 09:01:04 AM | Posted IP 162.1*****

தேர்தல் வரும் நேரம் ஏதாச்சும் உளறிக்கிட்டு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education



Arputham Hospital




Thoothukudi Business Directory