» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பட்டினமருதூர் பகுதியே மதுராவா? ஆய்வு நடத்த தொல்லியல் ஆர்வலர் கோரிக்கை!

திங்கள் 21, ஏப்ரல் 2025 12:23:36 PM (IST)



பாண்டியர்கள் ஆண்ட தூத்துக்குடி மாவட்டம் பட்டினமருதூர் பகுதியே மதுராவா என்பது குறித்தும், சிலப்பதிகாரம் வர்ணிக்கும் மதுராபதி தெய்வம் நமது பண்டைய மதுரா நகரின் பிரதான தெய்வமா என்பது குறித்தும் ஆய்வு நடத்த வேண்டும் என்று வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "சிலப்பதிகாரம் வாயிலாக இளங்கோவடிகள் குறிப்பிடும் மதுராபதித் தெய்வம் யார்? இனி அடிகளார் காலத்தில் மதுரையில் கோயில் இருந்ததா? இருப்பின் அது சிவ வழிபாட்டுக் கொள்கை உடையதாக இருந்ததா? என்ற வினாக்களை எழுப்பின் மதுரைக் காண்டத்தின் இறுதிக் காதையாகிய கட்டுரை காதை ஒரு புதுச் செய்தியை அறிவிக்கின்றது. அதில் உள்ள ‘வீரபத்தினி முன் வந்து தோன்றிய மதுராபதி என்னும் தெய்வத்தை வருணிக்கும்’ பகுதி ஆகும் முதல் பத்து வரிகள். 

அடுத்துள்ள கட்டுரை காதையின் தொடக்கம் -வந்து தோன்றிய மதுராபதியின் வருணனையாகும். 'சடையும் பிறையும் தாழ்ந்த சென்னிக் குவளை உண் கண் தவளவாள் முகத்தி கடைஎயிறு அரும்பிய பவளச்செவ் வாய்த்தி இடைநிலா விரிந்த நித்தில நகைத்தி இடமருங்கும் இருண்ட நீலமாயினும் வலமருங்கு பொன்நிறம் புரையும் மேனியள் இடக்கைப் பொலம்பூந் தாமரை ஏந்தினும் வலக்கை அம்சுடர்க் கொடுவாள் பிடித்தோள் வலக்கால் புனைகழல் கட்டினும் இடக்கால் தனிச் சிலம்பு அரற்றும் தகைமையள் பனித்துறைக் கொற்கைக் கொண்கன், குமரித் துறைவன் பொற்கோட்டு வரம்பன் பொதியில் பொருப்பன் குலமுதல் கிழத்தி.... 

கடைசி மூன்று வரிகள் பாண்டியன் பெருமை கூறி அப் பாண்டியர்களின் குல முதலாவாள் என்று அத் தெய்வத்தைப் பற்றிக் கூறிய அடிகளார் ஒன்று முதல் பத்துவரையுள்ள வரிகளில் அழகாக அம்மையப்பன் வடிவான உமையொருபாகனை வருணிக்கின்றார். உமையொருபாகனுக்குரிய இந்த வருணனையை எப்படிக் காவல் தெய்வம் எனப்படும் சிறு தெய்வத்திற்கு ஏற்றிக் கூற முடியும்? காவல் தெய்வமாயின் அதனைப் பாண்டியர்களின் குல முதல் என்று யார் கூறத் துணிவர்? என்பதும்

மதுராபதி என்றவுடன் மதுரை மாநகரின் காவல் தெய்வம் எனப் பிறழ உணர்ந்து கூறினவர்களும் உண்டு. 'வந்து தோன்றினள் மதுராபதியென்' என்று தான் அடிகள் கூறுகிறாரே தவிர அவள் காவல் தெய்வம் என்று கூறவில்லை என்பதை நோக்கவேண்டும் என்பதும், மதுரா+பதி = மதுராபதி (மதுரா நகரின் அதிபதி) என்பதும் பொருளாகும் பட்சத்தில் அன்னை மதுராபதி தெய்வம் மதுரா வின் பிரதான தெய்வமாகவே கருதமுடியும் என்றார்.

மேலும் பொ.ஊ.770ம் ஆண்டின் வேள்விக்குடி செப்பேடுகள் மூலம் பாண்டியர்கள் தங்களை விருஷிணி குல மன்னர்கள் என அடையாளப்படுத்தி உள்ளது என்பதும், தென்னிந்திய பகுதிகளில் தான் விருஷிணி வழிபாடு எனப்படும் 'ஐவர் வழிபாடு'(வாசுதேவன், பலராமன், பிரதியும்னன், சம்பா மற்றும் அனிருத்தன் ஆகியோர் ஒரே கருவறையில் அமர்ந்து அருள் பாலிக்கும்) தொடர்பான ஆலயங்கள் உள்ளன என்பதும், 

தூத்துக்குடி மாவட்டம் பட்டினமருதூரில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் வட்டெழுத்து கல்வெட்டின் கூற்றுப்படி 'மா ஏண் ஐவர் வுடை கோஞ்சடே' எனும் வார்த்தை 'பெரும் வலிமையான (நிலையான) ஐவர் உடைய கோஞ்சடே' என்று வேள்விக்குடி செப்பேடுகள் கருத்தினை பிரதிபலிக்கும் விதமாகவும், விருஷிணி வீரர்கள் வம்சத்தின் அடையாளத்தை குறிப்பிடுவதாகவும் கருதலாம் என்பதும், 

மத்திய பிரதேசம் பிஸ் நகரில் விருஷிணி வழிபாடு குறித்த தகவல்கள் உடன் காணப்படும் 'ஹிலியோடோரஸ் தூண்' போன்று நமது வைப்பார் நாகரிகத்தின் அனைத்து கிராமங்களிலும் பெருமாள் ஆலயம் மற்றும் சங்கு, சக்கரம், ஆஞ்சநேயர், ஆழ்வார் சிற்பங்கள் பொறிக்கப்பட்ட தூண்கள் காணப்படுகின்றன என்பதும், 
 
இத்தகைய ஆலயம் ஒன்று கூட வட இந்தியாவில் இல்லை என்று 2019ம் ஆண்டில் இந்திய தொல்லியல் துறையின் - தத்துவவியல் அறிஞரான முனைவர்.வினயகுமார் குப்தா என்பவரின் விருஷிணி வழிபாடு தொடர்பாக வெளியிட்டுள்ள ஆய்வு கட்டுரைகள் வாயிலாக நமக்கு புலனாகிறது என்பதும் வியப்பின் உச்சம் என்றார்.
 
மேலும் இந்த செப்பேட்டில் குறிப்பிட்டுள்ள பாண்டியரான கோச்சடையான் யுத்தம் செய்து வெற்றி கொண்ட மருதூர் என்பதற்கு சான்றாக இந்த பட்டினம் மருதூர் மற்றும் மேல மருதூர் ஆகிய ஊர்களின் பெயர்கள் அமைகின்றன என்றும் குறிப்பாக மேலமருதூர் கிராமம், மேலஅரசடி கிராமம், காயலூரணி கோவில்களில் பழங்கால வகை மணல் கற்களால் ஆன விளக்குத் தூண்கள் உள்ளன என்றும், முப்புலிவெட்டி கிராமத்தில் உள்ள கோவிலானது மிகவும் பழமையான வகையிலான சீரற்ற வடிவ விளக்குத் தூணைக் கொண்டுள்ளது - பாறை ஓவியம் முறையில் முற்கால மனிதர்களால் செதுக்கிச் செய்யப்பட்ட அனுமன், கருடன், சங்கு மற்றும் சுதர்சன சக்கரம் ஆகியவற்றின் சிற்பம் உள்ளது என்றும், 



தூத்துக்குடி மாவட்டம் பட்டினமருதூரில் சர்வே எண் 40ல் மண்ணில் புதையுண்டு உள்ள மணல் கலவையால் செய்யப்பட்ட தொன்மையான 215--190மி.மீ (சுமார் 8 அங்குலம்) தடிமன் கொண்ட தூண், மேல்புறம் காணப்படும் ஒரு வித சாவி காடி போன்ற அமைப்பு மற்றும் மண்ணில் தோண்டும் போது சிதைக்கப்பட்டு வெளிவந்த பெருமாள், வள்ளி, சுப்பிரமணியர், சிவகாமி, நந்தி, மச்சமுனி போன்ற சில தெய்வ திருமேனிகள் ஆகியவை இப்பகுதியில் மிகப்பெரிய கடற்கரை வளாக ஆலயங்கள் இருந்து மண்ணில் மறைந்து உள்ளது என்பதை நமக்கு உணர்த்துகின்றன என்றும், 

குறிப்பாக நமது தென்மதுரை மற்றும் மதுரா என்பது தற்போதைய வைப்பார் நாகரிகத்தின் பகுதியில் மறைந்த மற்றும் மறைக்கப்பட்ட கீழ்பட்டினம் (தருவைக்குளம் -- பட்டினம் மருதூர் கடற்கரை பகுதி) வணிக நகர நாகரிகம் தான் என்பதும், வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் மக்கள் தெற்கிலிருந்து வடக்கே மக்கள் நடமாட்டம் ஆகியவை இந்த வழிபாட்டு முறை வடக்கே அடைவதற்கு காரணமாக இருக்கலாம் என்பது விரைவில் இப்பகுதியில் ஆரம்பமாக இருக்கும் நமது தமிழக தொல்லியல் துறையின் சீர் மிகு ஆய்வுகள் வாயிலாக அறிவியல் சான்றுகள் மூலம் உலகுணர புலனாகும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றும், அவ்வாறு வரலாறு உணர்த்தும் பட்சத்தில் எங்கே கண்ணனின் துவாரகா நகரம் புதையுண்டு இருக்க வாய்ப்பு அதிகம்? நிச்சயமாக இந்த பகுதியில் தான் அல்லவா? எனவே இப்பகுதி நமக்கு மிகுந்த தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்றார்.
 
இராபர்ட் ஓரம் பொ.ஊ.1778ல் மிக துல்லியமாக + 5 நிமிடங்கள் என்ற ஏற்றுக்கொள்ள கூடிய மிக சிறிய விகிதம் வித்தியாசங்கள் கொண்டதாக DMS(DEGREE MINUTES SECONDS) முறையில் கொல்லிடம் - கன்னியாகுமரி என்ற தலைப்பில் வரைந்த வரைபடத்தில் தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பகுதியில் தற்போதைய சமத்துவபுரம் அருகில் உள்ள பழைய நதி முகத்துவாரத்தில் குறிப்பிடப்படும் பச்சை நிறத்தில் அடையாளம் இடப்பட்ட தீவு தற்போது பூமியில் காணப்படவில்லை என்பது எதை நமக்கு உணர்த்துகிறது என்றும், 

நமது மண்ணில் புதையுண்டுள்ள மதுரா நகரின் பகுதி ஏன் சூட்சமமாக கீழ் பட்டினம் என நமது முன்னோர்களால் வழங்கப்பட்டது என கருதக்கூடாது? என்றும், ஏன் அழிவுற்ற அதே பகுதியில் மீண்டும் பின் வந்த ஆட்சியாளர்கள் புதுப்பித்தும், மறு கட்டமைப்புகள் செய்தும் தங்கள் தொடர் வணிக நடவடிக்கைகளை திறம்பட மேற்கொண்டு வந்திருக்க கூடாது? என்ற தனது வரலாறு மற்றும் தொல்லியல் புரிதல்களை மாவட்ட ஆட்சியர் வாயிலாக தொல்லியல் துறைக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory