» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவிலில் நகை கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை

செவ்வாய் 25, மார்ச் 2025 8:34:54 AM (IST)

கயத்தாறு அருகே கோவிலில் புகுந்து நகை மற்றும் புதிதாக வாங்கி வைத்திருந்த மணியை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே திருமங்கலக்குறிச்சியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்திலேயே மாரியம்மன், காளியம்மன், துர்க்கை அம்மன் என தனித்தனியாக 3 சாமி சன்னதிகள் உள்ளன. கோவில் பூசாரி தினமும் இரவு கோவிலுக்கு வந்து பூஜைகள் செய்வார். அங்கு பூஜைகளை முடித்துக் கொண்டு, மின்விளக்குகளை எரியவிட்டு, அம்மன் சன்னதி கதவுகளை பூட்டிச் செல்வார். அதன் சாவியை அவர் வைத்துக் கொள்வார்.

கோவில் வளாகத்தை சுற்றி சுமார் 2½ அடி உயரத்தில் இரும்பு கம்பிகளால் சிறிய கிரில்கேட் அமைக்கப்பட்டுள்ளது. அதனை, கோவில் அருகே வசித்து வரும் முத்துப்பாண்டி என்பவர் பூட்டிச் செல்வார். பின்னர் மறுநாள் காலையில் சென்று கோவிலை திறந்து மின்விளக்குகளை அணைப்பது வழக்கம்.

அதன்படி, கோவில் பூசாரி, நேற்று முன்தினம் இரவு பூஜைகளை முடித்துக் கொண்டு அம்மன் சன்னதி கதவுகளை பூட்டிச் சென்றார். நேற்று காலை வழக்கம் போல முத்துப்பாண்டி, கோவிலை திறந்து மின்விளக்குகளை அணைப்பதற்காக சென்றார். அப்போது அம்மன் சன்னதி கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் ஊருக்குள் சென்று, கோவில் தர்மகர்த்தாக்களான கொம்பையா, சுடலை, சண்முகையா ஆகியோரிடம் தகவல் தெரிவித்தார்.

அவர்கள் உடனடியாக கோவிலுக்கு வந்து பார்த்தனர். கோவிலில் கட்டுவதற்காக ரூ.14 ஆயிரத்தில் புதிதாக வாங்கி வைத்திருந்த மணி மற்றும் அம்மன் சிலைகளின் கழுத்தில் கிடந்த 8 கிராம் தங்கத்தாலிகளை காணவில்லை. இதனை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டது தெரியவந்தது. மேலும் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும் மர்மநபர்கள் திருடிச் சென்றனர். அம்மன் சன்னதி பூட்டுகளை மர்மநபர்கள் எந்திரத்தால் அறுத்து அதன் அருகே வீசிப்பட்டு கிடந்ததும் தெரியவந்தது.

இந்த கொள்ளை சம்பவம் பற்றி, கயத்தாறு போலீசில் கொம்பையா, சுடலை, சண்முகையா ஆகியோர் புகார் செய்தனர். கோவிலுக்கு போலீசார் வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



Thoothukudi Business Directory