» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வழக்கறிஞர் கொலை வழக்கு: 3பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
சனி 25, மார்ச் 2023 8:52:18 PM (IST)
தூத்துக்குடி வழக்கறிஞர் முத்துகுமார் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3பேர் இன்று ஓரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் கடந்த 22.02.2023 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோரீஸ்புரம் பகுதியில் சோரீஸ்புரம், அய்யனடைப்பு பகுதியை சேர்ந்த வழக்கறிஞரான பச்சைக்கண்ணன் மகன் முத்துகுமார் (47) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் தென்காசி மாவட்டம் கீழ கடையம் பகுதியை சேர்ந்த காமராஜ் மகன் ராஜரத்தினம் (29), ஆறுமுகநேரி கந்தசாமிபுரம் பகுதியை சேர்ந்த சிங்கராஜ் (எ) சிங்கராஜா மகன் வேல்முருகன் (29), திருவள்ளூர் மாவட்டம் கம்மவார் பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயகுமார் மகன் இலங்கேஸ்வரன் (29) உட்பட இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ராஜரத்தினம், வேல்முருகன் மற்றும் இலங்கேஸ்வரன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் கே. செந்தில்ராஜ் 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் 3பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடைத்தார்.