» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாயமான மாணவிகள் இருவர் மதுரையில் மீட்பு
வியாழன் 1, டிசம்பர் 2022 5:11:09 PM (IST)
சாத்தான்குளத்தில் மாயமான கல்லூரி மாணவிகள் இருவர் மதுரையில் மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரத்தை சேர்ந்தவர் அச்சுதன். இவரது மகள் கார்த்திகா (19). இவர் சாத்தான்குளம் அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இதே கல்லூரியில் படித்து வருபவர் சாத்தான்குளம் அருகே உள்ள கொழுந்தட்டு மேலத்தெருவை சேர்ந்த ராபர்ட்செல்வன் மகள் எப்சிபா செல்வகுமாரி (20).
இந்நிலையில் கடந்த 23-ம் தேதி மாணவிகள் இருவரும் திடீரென மாயமானார்கள். அவர்களை தொடர்பு கொண்டபோது செல்போன் சுட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பாக அச்சுதன் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் விசாரணை நடத்தி வந்தார். இதற்கிடையே மாயமான மாணவிகளை விரைந்து முடிக்க கோரி கார்த்திகாவின் பெற்றோர் நெல்லை சரக டி.ஐ.ஜி. அலுவலத்தில் புகார் மனு கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் மாணவியின் செல்போன் சிக்னலை கொண்டும் தீவிரமாக தேடி வந்தனர். தொடர்ந்து அவர்கள் விருதுநகர், சங்கரன்கோவில், மதுரை பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாணவிகள் மதுரையில் உள்ள விடுதியில் தங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தனிப்படையினர் அங்கு சென்று மாணவிகளை மீட்டு சாத்தான்குளம் அழைத்து வந்தனர்.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் இணைபிரியாத தோழிகள் என்றும், வெளியூரில் ஒன்றாக வேலை தேடி வாழ்வது என்று முடிவெடுத்து ஊரை விட்டு சென்றதாக தெரிவித்தனர். இதையடுத்து மாணவிகள் இருவரும் போலீசார் அறிவுரை வழங்கி அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.