» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ராஜீவ் படுகொலைக்கு நீதி கேட்டு காங்கிரஸ் நிர்வாகி மரத்தில் தலைகீழாக தொங்கி நூதனப் போராட்டம்!
சனி 14, மே 2022 11:55:41 AM (IST)
ராஜீவ் காந்தி மற்றும் அவருடன் இறந்த 15 பேர் கொலையில் நீதியை நிலை நிறுத்த வேண்டி கடம்பூரில் காங்கிரஸ் பிரமுகர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பத்திரபதிவு அலுவலகம் முன்பு காங்கிரஸ் மாவட்டத் துணைத்தலைவர் மரத்தில் அய்யலுசாமி இன்று காலை தலைகீழாக தொங்கி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றி முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 7 பேரை தூக்கில் போட வேண்டும்.
7 பேரில் ஒருவரான பேரறிவாளன் விடுதலை செய்யக்கோரி கோர்ட்டில் நடைபெற்று வரும் விசாரணையில தமிழக அரசு அவருக்கு ஆதரவாக செயல்படுவது தவறு ஆகும். ராஜீவ் காந்தியுடன் இறந்த 15 பேரில் 14 பேர் தமிழர்கள். அவர்களது குடும்பங்கள் அல்லல்படும் நிலையில் உள்ளன. அந்த குடும்பத்திற்கு உதவி செய்யாமல் குற்றவாளிகளுக்காக அனுதாபப்படுவது கண்டனத்திற்குரியது.
எனவே உடனடியாக ராஜீவ்காந்தியுடன் இறந்த குடும்பத்திற்கு தலா ரூ. 5 கோடி மற்றும் அரசு வேலையும், காயமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 2 கோடி மற்றும் அரசு வேலையும் வழங்க வேண்டும். தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை வாபஸ் பெற்று ராஜீவ்காந்தி மற்றும் அவருடன் இறந்த 15 பேர் கொலையில் நீதியை நிலை நிறுத்த வேண்டி தற்போது இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக மரத்தில் தலைகீழாக தொங்கியவாறு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். இதில் கயத்தாறு ஒன்றிய முன்னாள் தலைவர் செல்லத்துரை, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராமதாஸ், சுப்பாராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழன்மே 15, 2022 - 08:44:18 PM | Posted IP 162.1*****