» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இரத்த உறவு சொந்தங்களில் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்!

ஞாயிறு 8, மே 2022 8:22:02 PM (IST)



இரத்த உறவு சம்பந்தப்பட்ட சொந்தங்களில் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும்  என உலக தலசீமியா தினத்தில்  மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் அறிவுறுத்தினார். 

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக தலசீமியா தினம் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலைமையில் இன்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியை ஆட்சியர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, தலசீமியா நோயாளிகளை ஊக்குவிக்கும் விதமாக பரிசுப்பொருட்கள் வழங்கி அவர்களிடம் தலசீமியா நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசியதாவது: தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தலசீமியா நோய் எப்படி ஏற்படுகிறது, அதனை தடுப்பது எப்படி என்பது குறித்து மக்களிடையே விழிப்பணாவு ஏற்படுத்த ஆண்டுதோறும் மே மாதம் 8 ஆம் தேதியை உலக தலசீமியா தினம் கொண்டாடப்படுகிறது. 

தலசீமியா இன்டர்நேஷனல் /பெடரேஷன் 1994 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதியை உலக தலசீமியா தினமாக அறிவித்தது. இந்த நோயின் தீவிரத்தன்மையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதால், இதற்காக ஒரு தினத்தை அறிவித்து, வுஐகு அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் நோயைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு, உலக தலசீமியா தினத்துக்கான கருப்பொருள், ‘விழிப்புணர்வு, பகிர்தல் மற்றும் பராமரித்தல்: தலசீமியா பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்கு சமூகத்தில் ஒருங்கிணைந்து செயல்படுதல் ஆகும். தலசீமியா பரம்பரை நோய் என்பதால், பலரும் தெரியாமலேயே தங்களின் குழந்தைக்கு இந்த நோய் ஏற்படக் காரணமாக உள்ளனர். 

முறையான சோதனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம், நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிகையை குறைக்க வேண்டும். பலருக்கும், இப்படியொரு மரபணு நோய் இருப்பது தெரியாமல் இருக்கலாம். எனவே, இதைப் பற்றி பலருக்கும் சென்றடைய வேண்டும் என்று விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீவிர தலசீமியா பாதிப்புடன் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சுமார் 10,000 முதல் 15,000 குழந்தைகள் பிறப்பதாக இந்திய தேசிய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. உலக அளவில், பாதிப்படைந்த குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 300,000 முதல் 500,000 ஆக அதிகரிக்கிறது. மேலும், இந்தியாவில் தோராயமாக 67,000 நோயாளிகள் பீட்டா தலசீமியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஹீமோகுளோபின் தொடர்பான நோய்களை விரைந்து கண்டுபிடிப்பதற்கும், அதற்கு தேவையான சிகிச்சை அளிப்பதற்கும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறன்றன. இந்தியாவில் 4 முதல் 5 சதவீதம் பேருக்கு தலசீமியா நோய் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. மரபணு மூலம் 3 முதல் 4 சதவீத மக்களுக்கு இந்த நோய் வருகிறது. எனவே இந்த நோய் வராமல் தடுப்பதற்கு மருத்துவ துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். நாம் இரத்த உறவு சம்பந்தப்பட்ட சொந்தங்களில் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும் அனைவரும் திருமணத்திற்கு முன்பு மரபு வழி நோய்கள் தங்களுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று மருத்துவர்களிடம் சென்று பரிசோதனை செய்த பின்னர் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

தலசீமியா நோய்க்கான நவீன சிகிச்சை முறைகள் சென்னை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ளது. தூத்துக்குடி உள்ளிட்ட இரண்டாம் நிலை நகரங்களுக்கும் இந்த வசதிகள் விரைவில் கிடைக்கப்பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு அதிக அளவில் தலசீமியா நோய் பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் எந்தெந்த இடங்களில் இந்த நோய் ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து பொது சுகாதாரத்துறையினர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இரத்தம் அதிகளவில் தேவைப்படுவதால் தன்னார்வலர்கள் இரத்த தானம் செய்வதற்கு அதிகளவில் முன்வர வேண்டும். இதுதொடர்பாக மக்களிடயே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மருத்துவர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஒவ்வொரு மாதமும் விழிப்புணர்வு நிக்ச்சிகள் நடத்த வேண்டும். அடுத்த ஆண்டு தலசீமியா தினம் கொண்டாடுவதற்கு முன்பு தலசீமியா பாதித்த குழந்தைகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்தம் மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கும் அளவிற்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளர வேண்டும் என பேசினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நேரு, துணை கண்காணிப்பாளர் மு.குமரன், உறைவிட மருத்துவர் து.சைலஸ் ஜெபமணி, தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வக்குமார், துறைத்தலைவர் ஏ.அருணாசலம், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital









Thoothukudi Business Directory