» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீடு இடிந்து விழுந்து நிறைமாத கர்ப்பிணி - தாய் பலி : தூத்துக்குடியில் சோகம்!
செவ்வாய் 3, மே 2022 8:17:07 AM (IST)
தூத்துக்குடியில் அதிகாலையில் வீடு இடிந்து விழுந்ததில் நிறைமாத கர்ப்பிணியும் அவரது தாயாரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அண்ணா நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் முத்துராமன். காய்கறி மார்கெட்டில் உள்ள கழிப்பறையில் கட்டணம் வசூல் செய்யும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி காளியம்மாள்(47) இந்த தம்பதியினரின் ஒரே மகளான காத்தம்மா (எ) கார்த்திகா (21). இவருக்கு திருமணமாகி 9-மாத கர்ப்பிணியான இவரை நேற்று முன்தினம் வளைகாப்பு நடத்தி அண்ணா நகரில் உள்ள தங்களது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை 3 மணி அளவில் வீட்டின் மேற்கூரை கட்டைகுத்து கட்டிடம் இடிந்து விழுந்து கர்ப்பிணி பெண், தாய், தந்தை மூவரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். வீட்டின் வெளியே தனி அறையில் தூங்கிக் கொண்டிருந்த முத்துராமனின் தாயார் (72) என்பவர் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து அருகிலுள்ளோரை உதவிக்கு அழைத்துள்ளார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தென்பாகம் காவல் ஆய்வாளர் நாகராஜன், உதவி ஆய்வாளர்கள் சிவக்குமார், முத்து கணேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கர்ப்பிணி பெண் மற்றும் அவரது தாயார் உயிரிழந்த நிலையில் உடல்கள் மீட்கப்பட்டது. மேலும் அவரது தந்தை படுகாயம் அடைந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் உயிரிழந்த தாய் - மகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த முத்துராமன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், எஸ்பி பாலாஜி சரவணன் ஆகியோர் பார்வையிட்டு முத்துராமனின் தாயாருக்கு ஆறுதல் கூறினார். தூத்துக்குடியில் வீடு இடிந்து விழுந்து நிறைமாத கர்ப்பிணி மற்றும் அவரது தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.