» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஊரடங்கை மீறியவர்களிடம் ரூ.26 லட்சம் அபராதம் வசூல்: காவல்துறை அதிரடி நடவடிக்கை!
ஞாயிறு 16, ஜனவரி 2022 5:54:14 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களில் முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்களிடம் ரூ.26 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்தார்.
தற்போது பரவி வரும் ஒமைக்ரான் கொரோன பெருந்தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு இன்று (16.01.2022) ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. அதன்படி இன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 68 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 2 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 15 காவல் துணை கண்காணிப்பாளர்கள் உட்பட 1500 போலீசார் வாகன தணிக்கை மற்றும் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தேவையில்லாமல் சுற்றுபவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
காவல்துறையினரின் பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இன்று (16.01.2022) குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு பகுதியில் நேரில் சென்று பார்வையிட்டு, வெளியே சுற்றுபவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி கபசுரகுடிநீர் மற்றும் முககவசம் வழங்கினார். அப்போது மாவட்ட கண்காணிப்பாளர் பேசுகையில், தற்போது ஒமைக்ரான் கொரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவிவருகிறது. இதை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அமலில் இருந்து வருகிறது.
அதன்படி இன்று (16.01.2022) முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இன்று முழு ஊரடங்கை முன்னிட்டு எந்த கடைகளும் திறப்பதற்கு அனுமதி இல்லை. பால் மற்றும் மருத்துவ சேவைகள் போன்ற அத்தியாவசிய தேவைகள் வழக்கம்போல் இயங்கும், ஹோட்டல்களில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். ஆகவே பொதுமக்களாகிய நீங்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும், தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம், தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும், அத்தியாவசிய தேவைகளான மருத்துவமனை, மருந்தகம், மருத்துவ பணியாளர்கள், கொரோனா தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிக்கு செல்வோருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேவையில்லாமல் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு, வழக்கு பதிவு செய்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தூத்துக்குடி நகரில் 24 இடங்கள் உட்பட மாவட்டம் முழுவதும் 68 முக்கிய இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களில் முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்கள் என 12,000க்கு மேற்ப்பட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.26 லட்சத்திற்கு மேற்பட்ட பணம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிப்பது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி முகக்கவசம் அணிய வைக்க வேண்டும் என்பதற்காகத்தானே தவிர வேறெந்த நோக்கமும் இல்லை. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். அனைவரும் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை கிருமிநாசினி மற்றும் சோப்பு போட்டு அடிக்கடி சுத்தம் செய்யவேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடித்து முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ், வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ரபி சுஜின் ஜோஸ், மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபிரகாஷ், மத்தியபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகபெருமாள், போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் உட்பட காவல் துறையினர் உடனிருந்தனர்.