» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 116 பேர் கைது - 803 மது பாட்டில்கள் பறிமுதல்
ஞாயிறு 16, ஜனவரி 2022 5:47:05 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா, புகையிலைப் பொருட்கள், மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 116 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று எவ்வித அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க அனைத்து உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல நிலைய அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவிட்டிருந்தார்.
அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் தீவிர ரோந்து மேற்கொண்டதின் பேரில் நேற்று (15.01.2022) ஒரே நாளில் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா, புகையிலைப் பொருட்கள், மதுபாட்டில்கள் விற்பனை செய்தவர்கள், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் பொது இடங்களில் மது அருந்திவிட்டு பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தவர்கள் என தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 20 வழக்குகளும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 12 வழக்குகளும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 13 வழக்குகளும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 4 வழக்குகளும், மணியாச்சி உட்கோட்டத்தில் 11 வழக்குகளும்,
கோவில்பட்டி உட்கோட்டத்தில் 21 வழக்குகளும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 7 வழக்குகளும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 9 வழக்குகளும், மதுவிலக்கு காவல் நிலையங்களில் 9 வழக்குகளும் ஆக மொத்தம் 106 வழக்குகள் பதிவு செய்து 116 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 803 மதுபாட்டில்கள், 400 கிராம் கஞ்சா, 111 புகையிலைப் பாக்கெட்டுகள், மற்றும் ரூ.10,140 பணமும் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.