» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கட்டபொம்மன் கோட்டையில் காணும்பொங்கல் விழா ரத்து : சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
சனி 15, ஜனவரி 2022 7:24:11 PM (IST)
வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் அனுமதி மறுக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத் தலமாக வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை திகழ்ந்து வருகிறது. இந்த சுற்றுலா தளத்தில் ஆண்டுதோறும் தமிழக திருநாளான மாட்டுப்பொங்கல் தினத்தில் காணும் பொங்கல் கொண்டாடப்படுவது வழக்கம். அன்றைய தினம் சுற்றுலாத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இங்கு தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு வந்து செல்வர்.
கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் இருந்தபோதும் தமிழக அரசு சார்பில் பொங்கல் திருநாளில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விழா நடத்த அனுமதி வழங்கியது. இந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. ஆனாலும் கடந்த ஆண்டைப்போல, பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டையில் காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் இன்று காலையில் இருந்து சுற்றுலாப் பயணிகள் பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு வந்தனர்.
ஆனால் விழாவுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டதாக சுற்றுலா பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோட்டையின் வாசலும் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும், பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் மணியாச்சி டிஎஸ்பி சங்கர், ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.