» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கத்தி முனையில் பெண்ணிடம் நகை பறிப்பு : 3வாலிபர்கள் கைது
சனி 15, ஜனவரி 2022 12:42:22 PM (IST)
தூத்துக்குடியில் கத்திமுனையில் பெண்ணிடம் 3 பவுன் செயினை பறித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி லூர்தம்மாள் புரம், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ராஜா என்ற நாகூர் அனிபா. இவரது மனைவி லைலா என்ற பாத்திமா (47). இவர் நேற்று தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள், பாத்திமாவிடம் கஞ்சா கிடைக்குமா? என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் இங்கே கஞ்சா விற்பதில்லை என்று கூறியுள்ளார்.
அப்போது அதில் ஒரு வாலிபர் கத்தியை எடுத்து பாத்திமா கழுத்தில் வைத்து அவர் அணிந்திருந்த 3 பவுன் தாலிச் சங்கிலியை கேட்டுள்ளார். உடனடியாக பாத்திமா கத்தியைத் தட்டி விட முயன்ற போது, அருகில் நின்ற 2 வாலிபர்கள் அவர் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு, 3 பேரும் பைக்கில் தப்பிச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் பாத்திமா புகார் செய்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சியை வைத்து விசாரணை நடத்தியதில் தூத்துக்குடி முத்து கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் சுந்தரபாண்டி (20), பாத்திமா நகரை சேர்ந்த ஜெரோன் மகன் கார்லீன் (21), ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் முருகன் (22) ஆகிய மூவரும் நகை பறித்தது தெரியவ்நதது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து 3 தங்க செயின், கத்தி மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.