» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வணிக வளாக கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து : உயிர்சேதம் தவிர்ப்பு
புதன் 27, அக்டோபர் 2021 4:14:41 PM (IST)
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் தனியார் வணிக வளாக கட்டிடத்தின் முன்பக்க பகுதி இடிந்து விழுந்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி முத்தையாபுரம் பகுதியில் உள்ள சுமார் 20 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தின் கீழ் தளத்தில் ஹோட்டல், சலூன், செல்போன் கடை மற்றும் மேல் தளத்தில் டெய்லர் கடையும் உள்ளது. நேற்றைய தினம் இரவு பெய்த மழையின் காரணமாக இன்று மதியம் திடீரென மேல் தளத்தில் உள்ள கைப்பிடி சுவர் இடிந்து விழுந்தது.
இதில், அங்குள்ள ஹோட்டலின் முன் பகுதி முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இப்பகுதியில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் இது போன்று பல இடங்களில் பழைய கட்டிடங்கள் இடியும் தருவாயில் உள்ளன. இதனை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.