» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதன் 24, நவம்பர் 2021 4:15:23 PM (IST)
மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதற்கான மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதாவை நவம்பர் 29ந்தேதி துவங்க உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யவும் அரசு திட்டமிட்டு உள்ளது. இதனால் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட உள்ள மத்திய அரசின் பொருள்பட்டியலில் ‘வேளாண் சட்டங்கள் ரத்து வரைவு சட்ட மசோதா, 2021’ சேர்க்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், இம்மாதம் 29ம்தேதி தொடங்க உள்ள மக்களவையின் குளிர்கால கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, கடந்த நவம்பர் 19ந்தேதி வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தார். மேலும், குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பதற்கான குழு ஒன்றும் அமைக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த எதிர்க்கட்சி முதல்வர்கள் குறைந்த பட்ச ஆதரவு விலையை நிரந்தரப்படுத்த கோரி கடிதம் ஒன்றை தாக்கல் செய்தனர். குறைந்த பட்ச ஆதரவு விலை மசோதா எப்படி அமைய வெண்டும் என்று வரைவு மசோதா ஒன்றையும் தாக்கல் செய்தனர். அந்த மசோதாவை சட்டமாக்கினால் போதும் என்றும் சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் பேச்சாளர் ராகேஷ் டிகைத் குறிப்பிட்டார்.